Skip to main content

ஐஆர்எப்சி ஐபிஓ ஜன.18ல் வெளியீடு; 4633 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டம்!!

Published on 17/01/2021 | Edited on 17/01/2021

 

irfc ipo releasing this week

 

இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக பொதுத்துறைக்குச் சொந்தமான, இந்திய ரயில்வே நிதியியல் கழகம் எனப்படும் இந்தியன் ரயில்வே பைனான்சியல் கார்ப்பரேஷன் (ஐஆர்எப்சி) நிறுவனத்தின் ஐபிஓ திங்கள்கிழமை (ஜன. 18) வெளியாகிறது.

 

ரயில்வே துறையின் விரிவாக்கத்திற்குத் தேவையான மூலதனத்தை திரட்டிக் கொடுப்பதில் ஐஆர்எப்சி நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது என்பிஎப்சி எனப்படும் வங்கி அல்லாத நிதிச்சேவை நிறுவனம் ஆகும். 

 

பங்கு வெளியீட்டின் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. ஐபிஓவில் ஒரு பங்கின் விலை 25 - 26 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. 

 

ஐஆர்எப்சி நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும், அதாவது 938 கோடி பங்குகளும் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், ஐபிஓ மூலமாக 178.2 கோடி பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. 

 

இதில், ஐஆர்எப்சி நிறுவனம் புதிய பங்குகள் பிரிவில் 118.80 கோடி பங்குகளும், ஆஃபர் ஃபார் சேல் (ஓஎப்எஸ்) பிரிவில் 59.40 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளது. 

 

மொத்தப் பங்குகளில் 50 சதவீதம் வரையிலான பங்குகள் துறை சார்ந்த முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். ஒரு லாட் சைஸ் 575 பங்குகள் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இதன் மதிப்பு 14950 ரூபாய். கடந்த 2019ம் ஆண்டு ரயில்வே துறைக்குச் சொந்தமான ஐஆர்சிடிசி ஐபிஓ வெளியிட்டது. அப்போது, இந்தப் பங்கு வெளியீடு பெரும் வெற்றி அடைந்தது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டபோது சில்லரை முதலீட்டாளர்களுக்கு 100 சதவீதம் வரை லாபம் கிடைத்தது. 

 

விரைவில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஐஆர்எப்சி பங்கு வெளியீடும் சில்லரை முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்