இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் பிரமுகர்களை விலைபேசும் பாஜக!
இமாச்சல்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் காங்கிரசின் சில தலைவர்களை பாஜக விலைக்கு வாங்கி வருகிறது. இதையடுத்து அங்கு காங்கிரஸ் தோற்கும் என்ற தோற்றத்தை உருவாக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஊழல் அரசு நடத்துவதாக பாஜக கூறிவருகிறது. ஆனால், அந்த அரசாங்கத்திலும், கட்சியிலும் முக்கிய பங்காற்றிய சிலரை விலைக்கு வாங்கி தனது கட்சியில் இணைக்கும் வேலையில் பாஜக ஈடபட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய மாநில தலைவரும், 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான குஷ்வர்மாவின் மகன் சேட்டன் பார்மர் பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராவின் மகனும் வீரபத்ர சிங் அரசில் அமைச்சராக இருந்தவருமான அனில் சர்மா பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார்.
வீரபத்ர சிங் மீதுள்ள ஊழல் புகார் காரணமாக காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறாது என்பதால் பலர் தங்களை நோக்கி வருவதாக பாரதிய ஜனதா கூறியுள்ளது. 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல் சட்டமன்றத்திற்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
எந்தக் கட்சியை ஊழல் கட்சி என்று பிரச்சாரம் செய்கிறதோ அதே கட்சியிலிருந்தே தனக்கு ஆள் பிடிப்பது சமீபகாலமாக பாஜகவின் வழக்கமாக இருக்கிறது. பாஜகவின் இந்தப் போக்கு கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.