கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு
கடனைத் திருப்பித் தராததால் டிராக்டரை பறிமுதல் செய்தபோது, சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் சீத்தாபூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜியான்சந்த், விவசாயி. இவர் அங்குள்ள ஒரு நிதி நிறுவனத்தில் 5 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை கடனை வசூலிக்க வந்தவர்கள், பணம் கிடைக்காததால் டிராக்டரை எடுத்துச்செல்ல முயற்சித்துள்ளனர். இதில் கடன் வசூலிக்க வந்தவர்களுக்கும், ஜியான்சந்துக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேறு வழியின்றி டிராக்டரின் முன்பாக ஜியான்சந்த் வந்து நின்றபோது, எதிர்பாராத விதமாக டிராக்டர் சக்கரத்தில் சிக்கினார். இதில் ஜியான்சந்த் உடல்நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த காவல்துறையினர் பணம் வசூலிக்க வந்த ஏஜெண்டுகளைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் பெறும் கடனைத் திரும்பச் செலுத்தத் தவறும் பட்சத்தில், கூடுதலாக பணம் வசூலிக்கும் நோக்கில், பல நிதி நிறுவனங்கள் கடனை வசூலிக்க குண்டர்களைப் பயன்படுத்துகின்றன. அந்த குண்டர்களின் அத்துமீறலால் பல விவசாயிகள் உயிரைவிட்டது குறிப்பிடத்தக்கது.