Skip to main content

சிறுபான்மையினர் குறித்து சர்ச்சை கருத்து : மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்...

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா எனும் இடத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, " இந்து தீவிரவாதம் என கூறி இந்துக்களுக்கு எதிராக  ராகுல் காந்தி பேசியதால் தான், தற்போது இந்துக்களுக்கு பயந்து சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் வயநாட்டில் போட்டியிடுகிறார் " என பேசினார்.

 

congress slams modi for his remarks on wayanad and rahul gandhi

 

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் பேசும்போது, "மோடி பேசியுள்ளது மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் பிரிவு 123-ன்கீழ் குற்றச்செயலாகும். பிரதமராக இருக்கும் ஒருவர் அவரின் அலுவலகத்துக்கும், பதவிக்கும் மதிப்புக் குறையும் வகையில் பேசியுள்ளார். ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி குறிப்பிட்ட சிறுபான்மை மதத்தினர் வாழும் பகுதி என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

வயநாடு குறித்து மோடிக்கு என்ன தெரியும். சுதந்திரப் போராட்ட காலத்தில் வயநாடு எவ்வாறு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியது என்றும்,  கோட்டயம் ராஜ வம்சத்தினர் எவ்வாறு செயல்பட்டனர் என்ற வரலாறு மோடிக்கு தெரியாது. ராமர், சீதா ஆகியோரின் மகன்கள் லவன், குஷன் ஆகியோரின் கோயில்கள் வயநாட்டில் இருப்பது மோடிக்கு தெரியுமா. மோடிக்கு வயத்தில் உள்ள ஜெயின்களின் கண்ணாடிக் கோயில் குறித்தும் தெரியாது. 8 வகையான பழங்குடிமக்கள் வாழ்வது குறித்தும் தெரியாது.

வயநாட்டில் 50 சதவீதம் இந்துக்களும், கிறிஸ்தவர்கள் 21 சதவீதம் பேரும், முஸ்லிம்கள் 28 சதவீதம் பேரும் இருப்பது மோடிக்கு தெரியுமா. வயநாடு என்பது பல்வேறு தரப்பட்ட மதத்தினர், சமூகத்தினர் ஒன்றாக வாழும் மண்டலம்" என சுர்ஜேவாலா தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்