Skip to main content

“காங்கிரஸ் அழிவிற்கு ராகுல் காந்தியே காரணம்” - நீக்கப்பட்ட தலைவர் பகீர் குற்றச்சாட்டு

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Acharya pramod said Rahul Gandhi is responsible for the destruction of Congress

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதே வேளையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் பலர், அக்கட்சியில் இருந்து விலகி தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். இது, காங்கிரஸுக்கு பெரும் பின்னடவை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுரேஷ் பச்சோரி, முன்னாள் எம்.பி கஜேந்திர சிங் ரஜு கேதி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கடந்த 9ஆம் தேதி காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இது மத்திய பிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சுரேஷ் பச்சேரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க காங்கிரஸ் குரல் கொடுக்கும் என்று கூறிய காங்கிரஸ், இப்போது சாதியைப் பற்றி பேசுகிறது. கடந்த சில நாட்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்து அவர்கள் எடுத்த முடிவு என்னை கலக்கமடையச் செய்தது. அதில், குறிப்பாக, ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை நிராகரித்த விதம் எனக்கு ஏமாற்றமளித்தது. அதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.கவில் இணைய முடிவு செய்துள்ளேன்” என்று கூறினார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம், உத்தரப்பிரதேசத்தில் நேற்று (10-03-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, மூத்த காங்கிரஸ் தலைவர் சுரேஷ் பச்சேரி வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ராகுல் காந்தி இயக்கும் கப்பலில் இருந்து அனைவரும் வெளியேறுவார்கள். மூத்த தலைவர்கள் உட்பட பலர், தேர்தலுக்குள்ளும் காங்கிரசை விட்டு வெளியேறுவார்கள். ராகுல் காந்தியின் அறிக்கைகள் மற்றும் முடிவுகள் அனைத்தும் காங்கிரஸை கசப்பான முடிவை நோக்கியே கொண்டு செல்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் அழிவுக்கு காரணமான ஒரே நபர் ராகுல் காந்தி தான். ராகுல் காந்தி கட்சியில் இருக்கும் வரை காங்கிரஸை காப்பாற்ற முடியாது. ராமரைப் பற்றி தரக்குறைவாகப் பேசும் கட்சியில் யாரும் இருக்க விரும்பவில்லை. காங்கிரஸில் தொடர்ந்து நீடித்தால் தாங்கள் அழிந்து போவதை காங்கிரஸில் உள்ள பலர் உணர வேண்டும். ராமர் மீதான எதிர்ப்பின் மூலம் காங்கிரஸ் தனது அரசியல் அழிவின் நிலையையும், விரக்தியையும் அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், இப்போது ராமர் எதிர்ப்பு மற்றும் சனாதன எதிர்ப்பு கட்சி. சனாதனத்திற்கு எதிராக நிற்பவர்களுடன் யார் நிற்பார்கள்?” என்று கூறினார்.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்த போது, ஆச்சார்யா பிரமோத், காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும், ஜனவரி 22ஆம் தேதி அன்று அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார். அதன் பின்னர், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.