
தனது சகோதரனை கொலை செய்ததற்காக 36 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்து 104 வயதில் விடுதலையான சம்பவம் பலரையும் கவனிக்க வைத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள மாணிக்சாக் பகுதியைச் சேர்ந்தவர் ரசிக்த் மொண்டல். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலத் தகராறில் தனது சகோதரனை கொலை செய்துள்ளார். இதனால், இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த குற்றச்சாட்டிற்கு 36 வருடங்கள் சிறையில் இருந்த அவர், பலமுறை விடுதலைக்கான மனுக்களை தாக்கல் செய்துள்ளார். ஆனால், அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் அதனை நிராகரித்து வந்தது. இந்த நிலையில், அவருடைய 104வது வயதில் அவருக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்த ரசிக்த் மொண்டல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘எத்தனை வருடங்கள் நான் சிறையில் இருந்தேன் என்று எனக்கு நினைவில் இல்லை. அது ஒருபோதும் முடிவடையாததாகத் தோன்றியது. நான் எப்போது இங்கு அழைத்து வரப்பட்டேன் என்பது கூட எனக்கு நினைவில் இல்லை. இப்போது முழு நேரத்தையும் தோட்டக்கலை மற்றும் செடிகளை வளர்ப்பதற்கும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவேன்” என்று கூறினார்.