Skip to main content

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு யார் உத்தரவிட்டது? மனித உரிமை ஆணையம் போலீசாரிடம் சரமாரி கேள்வி!

Published on 04/06/2018 | Edited on 05/06/2018

 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வலியுறுத்தி கடந்த மே-22 ஆம் தேதி மக்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் போது போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து கண்ணீர்புகைவீச்சு, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டிலும் போலீசாரின் தடியடியாலும் காயம்பட்டவர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இதை தவிர வெளியே தெரியாமல் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுபவர்கள் உண்டு. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து அதில் உயிரிழந்தவர்கள் உட்பட சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் மனுதாக்கல் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் நேரடியாக முறையீடு செய்யுமாறும், அதன் பேரில் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதனைத்தொடர்ந்து வழக்கறிஞர் ராஜராஜன், தேசிய மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டார். அதனை ஏற்றுக்கொண்ட ஆணையம் சீனியர் எஸ்.பி.பபுல்தத்தா பிரசாத் அவரது தலைமையில் ஒய்வு பெற்ற டி.எஸ்.பி ராஜ்வீர் சிங் மற்றும் நீதின் குமார், அருண் தியாகி, லால் பகார் ஆகியோர் அடங்கிய குழுவை அனுப்பியது.

அந்த ஆணையித்தினர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி வந்தனர். பின்னர் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் பேசியவர்கள் தொடர்ந்து தென்மண்டல ஐ.ஜி.யான சைலேஷ் குமார் யாதவ், சரக டிஐஜி கபில் குமார் சராத்கர், எஸ்.பி.முரளி ரம்பா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் கூட்டத்தை கட்டடுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு யார் உத்தரவிட்டது? எந்த சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது? பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். போலீசாருக்கு ஏதும் காயம் ஏற்பட்டதா? என அவர்களிடம் விசாரித்தனர்.

அதன் பின்னர், இந்த ஆணையம் இரண்டு குழுவாக பிரிந்து, ஒரு குழுவினர் மாநகராட்சியின் மண்டலமான மில்லர்புரத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறினர். அதே சமயம் மருத்துவமனையில் காயம்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களிடம் அருண் தியாகி தரப்பு விசாரித்தது. அவர்களிடம் சம்பவங்கள் எப்படி நடந்தது என்று கேட்டறிந்தனர். இந்த குழுவினர் டெல்லியை சேர்ந்தவர்கள், தமிழ் தெரியாதவர்கள். ஆங்கிலமும் இந்தியும் மற்றுமே அறிந்தவர்கள். அதனால் தங்களின் விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்களும் பேசுவதை தெரிந்துக்கொள்ள ஒரு மொழிப்ப்பெயர்ப்பாளர் துணையுடன் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே ஆணையத்தின் முன்பு துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தவர்களான கார்த்திக், கந்தையா, சண்மூகம், தமிழரசன், ஜான்சிராணி, காளியப்பன், செல்வசேகர், ரஞ்சித் ஆகிய 8 பேர்களின் உறவினர்கள் ஆஜரானர். ஒருவர் தரப்பிற்கு அவரது உறவினர்கள் 3 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் இறந்தவர்கள் உங்களுக்கு எந்த வகையில் உறவினர். இதற்கு முன் போராட்டத்தில் கலந்துகொண்டாரா? இறந்தவர் போரட்டத்தின் போது தடியடி மூலமாக அல்லது துப்பாக்கியால் சூடப்பட்டு இறந்தார்களா? அவர் இறந்தது சம்பவ இடத்திலா? அல்லது சிகிச்சையின் போது மருத்துவமனையிலா? சம்பவத்தின் போது போலீசார் உங்களை மிரட்டினார்களா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டனர். மேலும் இறந்தவர் அந்த பகுதியை சேர்ந்தவரா? அவர்களது உறவினரா? என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டு பலியானவர்களின் தரப்பில் அவர்களது ஆதார் அட்டை, மற்றும் ரேஷன் கார்டு நகல்கள் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த கமிஷன் விசாரணை வரும் 6 ஆம் தேதி வரை நடக்க உள்ளது.

இதனிடையே தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஒய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன், இன்று மதியம் சென்னையிலிருந்து தூத்துகுடிக்கு விமானத்தில் வந்தனர். அங்கிருந்து ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி போலீஸ் அதிகாரிகளான ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில்குமார். எஸ்.பி.முரளி ரம்பா, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த குழு ஒருவாரம் தூத்துக்குடியில் தங்கியிருந்து சம்பவ இடங்கள் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்த உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 Supreme Court says Sterlite plant cannot be allowed to open immediately

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால், அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறியதாவது, ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் கூறியதாவது ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டார். 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்... ரஜினிகாந்த் வழக்கறிஞர்கள் ஆணையத்தில் விளக்கம்

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

கடந்த 2018  ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Explanation at Rajinikanth Lawyers Commission

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பல பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் நேரில் ஆஜராக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. சீமான் கடந்த மாதம் ஆஜரான நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவர் என எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் அவர் நேரில் ஆஜராகாமல் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர்கள் தற்போது ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் இறுதியில் காயமடைந்த மக்களை நேரில் பார்க்க சென்ற ரஜினிகாந்த் தூத்துக்குடி விமானநிலைத்தில் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக பேசியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவரிடம் இதுதொடர்பாக நேரில் விசாரணை ஆணையம் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரது வழக்கறிஞர் இளம்பாரதி உட்பட 3  வழக்கறிஞர்கள் ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணையத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்ற ரஜினியின் கோரிக்கையை விசாரணை ஆணையம் ஏற்றுகொண்டது. அதேபோல் ரஜினியிடம் கேட்கவேண்டிய கேள்விகள் சீலிடப்பட்ட கவரில் அவரது வழக்கறிஞர்களிடம் கொடுக்கப்பட்டது.