நான் யானையாய் இருந்தாலும் மதம் பிடிக்காது!
தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக நடந்த நட்சத்திர கலைவிழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சிறப்பாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அஜித், விஜய் மற்றும் மேலும் சில நடிகர்களைத் தவிர மற்ற நடிகர்கள் அனைவரும் பங்கேற்றனர். இதில் தமிழ் திரைத்துறையின் மூத்த நடிகர்களான கமலும், ரஜினியும் ஒன்றாக ஹெலிகாப்டரில் வந்து இறங்கி மலேசிய ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டனர். முதலில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டியும் நடைபெற்றது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கமலை மேடையேற்றி நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு சில கேள்விகளை அவரின் சினிமா வாழ்வைப் பற்றியும் இலை மறை காய் மறையாக அரசியல் சார்ந்த கேள்விகளையும் முன்வைக்கிறார் .அதற்கு கமல் தனது பாணியிலே பதிலை அளிக்கிறார். இந்த கேள்வி பதில் நிகழ்வு சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு சில கேள்விகளும் சுவாரசியமான பதில்களும் இங்கே...

முதலில் வரவேற்கும் விவேக், "அவர் முதுகில் குத்திய கத்திகளைப் பற்றி நாம் அறிந்ததில்லை. ஏனென்றால் அதனை அவர் வெளியே சொன்னதில்லை. இந்தக் குதிரை சலிக்காமல், சளைக்காமல் களைத்தாலும் விழுந்தாலும் ஐம்பது ஆண்டுகாலமாக பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் முன்பு சக்கரவர்த்தியின் குதிரை, இப்பொழுது சாமானியர்களையும் ஏற்றிச் செல்லும் குதிரை. புரிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள்" என்று மக்களை பார்த்துச் சொல்கிறார் விவேக். மக்கள் கூட்டம் கரகோஷம் எழுப்புகிறது, "ஏனென்றால் இது மருதநாயகத்தின் குதிரை. செவாலியர், பத்மபூஷன், டாக்டர்.கமல்ஹாசன் அவர்களை வரவேற்கிறேன்" என்று முடித்தார். விழாக்களில் கமலின் அரசியல் வரவை தொடர்புபடுத்தி வரவேற்பது இதுவே முதல்முறை.
விவேக் : களத்தூர் கண்ணம்மா கமல், காதல் மன்னன் கமல், களத்தில் இறங்கி கருத்துச் சொல்லும் கமல் மூன்று பேரை பற்றி சொல்லுங்கள்...
களத்தூர் கண்ணம்மா கமல், சொன்னதைச் சொல்லும் கேளிர் குழந்தை, அதன் பிறகு காதல் மன்னன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. காதல் எல்லோருக்கும் வரும் அதற்கு யாரும் மன்னர்கள் இல்லை. அது போல்நானும் கொஞ்சநாள் வாழ்ந்து பார்த்துவிட்டேன் அவ்வளவு தான் ,மற்றபடி களமிறங்கும் கமல் அது என்குரல்!
மக்களை பார்த்து 'உங்கள் குரல் தான் என்னை பேசவைத்துக்கொண்டிருக்கும் குரல், உணர்வு எல்லாம் மக்களின் குரல் தான். நன்றி' என்று முடித்தார்.
இந்த மூன்று பதில்களும் மூன்று சிக்ஸர் அடித்ததுபோல உள்ளது என்று கூட சொல்லாம் ஏனென்றால் மக்களின் கரகோஷத்தின் வெளிப்பாடு அவ்வாறு உள்ளது .
விவேக் : இதுவரை மத உணர்வு இல்லாமல் இருந்துள்ளீர்கள், வயது ஏற ஏற அனுபவம் கூட கூட... ஆன்மிகம் எட்டிப்பார்க்கிறதா? நான் மதம் என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை, ஆன்மிகத்தை மட்டுமே குறிப்பிடுகிறேன்.
அப்பொழுது ரஜினியை திரையில் காட்டுகிறார்கள். ஆனால் அவர் முகத்தில் இல்லாமல் அகத்தில் குமுறியிருப்பார்.
நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் தான் பார்த்துக்கொள்வேன். என் குணம் அவ்வாறே, வயது கூடக் கூட ஞானமும் அறிவும் அனுபவமும் கூடக் கூட அறிவு, பகுத்தறியும் உணர்வு கூடுகிறது, குறையவில்லை.
நுனி நாக்கில் பதில் உள்ளது போல சட்டென்று கூறினார்.

விவேக் : இப்போது நான் கேட்கும் கேள்வியில் அரசியல் இல்லை, ஆனா கொஞ்சம் இருக்கு. யாரையும் புண்படுத்தும் வகையில் கேட்கவில்லை, பொதுவாகக் கேட்கிறேன். மற்றவர்கள் கட்டை விரலை நனைப்பதற்கு யோசித்த பொழுது கழுத்தளவு ஆழத்தில் இறங்கி நின்றீர்கள். அந்தப் பயணம் தொடருமா?
இந்தப் பயணம் விரும்பி ஏற்றுக்கொண்டது இல்லை. கணுக்கால் கூட நனைக்கக் கூடாது என்று ஒதுங்கி இருந்தவர்கள் நாங்கள். கட்டுப்பாடு இல்லாத வெள்ளம் எப்படி 2015ல் தாக்கியதோ, அதுபோல் எங்களை சமூக அவலம் தாக்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் இருக்கும் இடத்தில் தான் இருக்கிறோம். கழுத்தளவு அசிங்கமான விஷயங்கள் எங்களைச் சூழ்ந்துவிட்டன. அதிலிருந்து மேம்படுவோம் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறோம். இது தனிமனிதன் செய்யும் செயலாக இருக்க முடியாது. தமிழர்கள் அனைவரும் சேர்ந்து செய்யக்கூடிய செயல்.
விவேக் : தொடர்சோதனைகள் உங்களைத் தாக்கும்பொழுது ஜோசியம், ஜாதகம் பக்கமெல்லாம் சென்றதுண்டா?
எங்க அம்மா பார்ப்பாங்க. நிறைய ஜோசியர்களைத் தேடிப் போவாங்க.. அந்த ஜோஷியங்களில் பல விஷயங்களைப் பொய் ஆக்கியிருக்கிறேன். நல்ல ஜோசியரே 'இது விளங்காது' என்று சொன்னார்கள். அதை விளங்க வைத்தது என் திறமை. எனக்குக் கற்று கொடுத்தவர் தான் உங்களுக்கும் கற்றுகொடுத்தவர்.
விவேக் உடனே 'தி கிரேட் பாலச்சந்தர் சார்' என்று சொல்கிறார். ஆன்மிகத்தின் வழியில் எந்தக் கேள்வி கேட்டாலும் இப்படித் தான் விளங்க வைப்பாரோ...
மேடையை விட்டு இறங்கி வந்தவுடன் தனது கலையுலக அண்ணனை ஆரத்தழுவ கட்டிப்பிடித்து வாழ்த்தினார் ரஜினி. இந்தத் தழுவல் அரசியல் அரங்கிலும் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .
ஹரிஹரசுதன்