Skip to main content

எடப்பாடி தூக்கி எறிந்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

சசிகலா கொடுத்த அதிகாரப் பூர்வ கடிதத்தைத் தொடர்ந்தே கட்சிப் பதிவு நடந்ததாக, தங்க.தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் தெரிவித்திருந்தாலும், தினகரனின் இந்த நடவடிக்கை சசிகலா குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தன்னை முதல்வர் பதவியில் உட்கார வைத்த சசியின் படத்தை கட்சி அலுவலகத்திலிருந்து எடப்பாடி தூக்கி எறிந்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்கிறது மன்னார்குடி தரப்பு.

 

eps ops



சசிகலா சிறைக்கு போகும் முன் டாக்டர் வெங்கடேஷ், டி.டி.வி. தினகரன் ஆகிய சொந்தங்களை மட்டும் கட்சியில் சேர்த்தார். அதில் டாக்டர் வெங்கடேஷுக்கு எந்த பதவியையும் தினகரன் தரவில்லை. டி.டி.வி. தினகரனுக்கு அவரது மனைவி அனுராதாவும் பி.ஏ. ஜனாவும்தான் எல்லாம் என்கிறார்கள். செந்தில் பாலாஜி, நாஞ்சில் சம்பத், கலைராஜன் போன்றவர்கள் அ.ம.மு.க.வை விட்டு விலகினார்கள்; "தற்போது எனக்குதான் செல்வாக்கு சசிகலா செல்லாக் காசு' என தேர்தல் கமிஷன், கட்சிப் பதிவு என சசிகலாவையே நீக்கிவிட்டார். இதற்கு டி.டி.வி. தினகரன் ஒரு விலை கொடுக்க வேண்டி வரும் என அடித்துச் சொல்கிறார்கள் அவர்களின் சொந்தங்கள்.

 

sasi



தினகரனின் இந்த மூவை இரண்டு விதமாக வாதிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். "எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க., இனி எந்த காலத்திலும் டி.டி.வி. தினகரனை ஏற்காது என அறிவித்துவிட்டது. ஆனால் அவர்கள் சசிகலாவை எதிர்க்கவில்லை. தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த எடப்பாடி எந்த இடத்திலும் சசிகலாவை தாக்கிப் பேசவில்லை. இது ஒரு சிக்னல்'' என்கிறவர்கள், மே மாதம் 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் ஒருவேளை எடப்பாடி அணிக்கு பாதகமாக வருமானால் அதற்கு            டி.டி.வி. அணி அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை உடைத்ததுதான் காரணமாக இருக்கக்கூடும். அதையடுத்து அணிகள் இணைப்பு, சசிகலா மீண்டும் பொதுச்செயலாளர் என்கிற நிலை உருவாகும். அதை முன்கூட்டியே கணித்துதான் சசிகலாவை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார் டி.டி.வி.'' என்கிறார்கள்.
 

sasi



"சசியை பொறுத்தவரை இதுவரை டி.டி.வி.யை பாசிட்டிவ் ஆகத்தான் பார்த்தார். ஆனால், தினகரனின் இந்த முடிவு சசிகலாவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுபற்றி காரசார அறிக்கை தர தயாரான தனது தம்பி திவாகரனிடம் "எதுவும் பேச வேண்டாம்' என உத்தரவிட்டுள்ளார் சசிகலா. பா.ஜ.க. எதிர்ப்பும் சாதி ஓட்டு களும்தான் தினகரனின் பலம். அதில் சாதி ஓட்டு சசிகலா நீக்கத்தால் தினகரனுக்கு விழாது. இது 4 தொகுதி சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படும். இனி அடுத்தது என்னவென்பதை இளவரசி மகன் விவேக்கும் அவருக்கு நெருக்கமான எடப்பாடி மகன் மிதுனும் முடிவு செய்வார்கள்'' என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.