Skip to main content

பள்ளிக்கல்வியைக் கெடுக்க பள்ளிக்கல்வித்துறை, நெடிய வயல்களை அழிக்க நெடுஞ்சாலைத்துறை, சபாஷ் சரியான அரசு!!!

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

தற்போது இருக்கும் அரசு யாருக்காக இருக்கிறது என்ற கேள்வி நமக்குள் பிறந்து பல நாட்கள் ஆகிவிட்டன. விளம்பரத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் அரசு மக்களை மறந்தும் நெடுநாள் ஆகிவிட்டது. ஜல்லிக்கட்டு, நீட், மீத்தேன், ஸ்டெர்லைட், காவிரி இப்படி பல பிரச்சனைகளில் அவர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை மீண்டும் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. தற்போது இரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஒன்று பள்ளிக்கல்வியை அழிக்க, மற்றொன்று விவசாயத்தை அழிக்க....
 

eps and sengotaiyan


 

 


இனி மொழிப்பாடங்களில் ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். அதன்படி இனி முதல்தாள், இரண்டாம் தாள் என்று பிரிந்து இருக்காது, இரண்டும் ஒன்றாக இணைக்கப்படும். இது மாணவர்களின் படிப்புச்சுமையை குறைக்கும் என்று கூறியுள்ளார் அமைச்சர். அப்படியானால் நீட்டிற்காக ராஜஸ்தான் வரை சென்றது சுமை இல்லையா, அல்லது அது சுமையாக தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இன்னொரு குறிப்பு பாடப்பகுதியில் எந்த மாற்றமும் இருக்காது, அனைத்தையும் ஒருங்கிணைத்தவாறு கேள்வித்தாள்கள் அமைய வேண்டும் என்பது. இங்கு இன்னொரு கேள்வி எழுகிறது. அதெப்படி 200 மதிப்பெண்களை 100 மதிப்பெண்களாக மாற்றுவீர்கள், எதையும் விடாமல் அனைத்தையும் ஒருங்கிணைத்து? இலக்கணம் என்பது ஒவ்வொருவரும் கண்டிப்பாக கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். அதற்காகத்தான் மொழிப்பாடங்களை இரண்டாகப் பிரித்து இலக்கணத்திற்கு அதிக கவனம் கொடுத்தனர் முன்பு இருந்தவர்கள். ஏற்கனவே மொழியறிவு, மொழி ஆளுமை என்பது தற்காலத்தில் குறைந்து வரும் நிலையில் இந்த முடிவு சரியானதா இல்லையா என்பதை கல்வியாளர்கள் சொல்ல வேண்டும்.  

 

 

 

நாட்டின் முதுகெலும்பு விவசாயம், உழுபவனே கடவுள்... இனி இந்த வார்த்தைகளையெல்லாம் காகிதத்தில் மட்டும்தான் விதைக்கமுடியும்போல... நெடுஞ்சாலைக்காக வயலை அழிப்பதை எதிர்த்து மக்கள் போராடும்போதும் முதல்வர் அந்த முடிவிலிருந்து மாறாமல் இருக்கிறார். கேட்டால் வளர்ச்சி முக்கியம் என்கிறார். வளர்ச்சியைவிட உயிரும், உணவும் முக்கியம் என்பதும், இந்த சாலை இல்லையென்றால் இன்னொரு சாலை வழியே செல்லலாம், ஆனால் விவசாய நிலம் போனால் வருமா என்பது கூடவா தெரியாது விவசாய குடும்பத்திலிருந்து வந்த முதல்வருக்கு என்று கேட்கிறார்கள் நிலத்தை இழக்கவிருக்கும் விவசாயிகள். இப்படி பல கேள்விகள் எழுகின்றன. மொத்தத்தில் இந்த அரசு மக்களுக்கு ஆதரவாக இருக்கிறதோ, இல்லையோ, மக்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. 

 

 

 

 

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.