Skip to main content

சிஸ்டம் சரியில்லை! அரசு பேருந்துகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்த வாய்ப்பு! தொழிலாளர்கள் குற்றச்சாட்டு.

Published on 20/07/2018 | Edited on 20/07/2018

 

 

 

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் நெல்லை உட்பட 8 கோட்டங்கள் மூலமாக சுமார் 23 ஆயிரம் அரசுப் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
 

இதனிடையே அ.போ.வ.கழகத்தின் பழைய பஸ்களுக்குப் பதிலாக புதிய மற்றும் நவீன கட்டமைப்புகளைக் கொண்ட 2 ஆயிரம் பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக சென்னையில் எடப்பாடி பழனிசாமி 540 நவீன பேருந்துகளைத் துவக்கிவைத்தார். கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பஸ்களில் 500 பஸ்கள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும் என்று போக்கு வரத்துக்கழக அதிகாரிகள் அறிவித்தனர்.

 

 

இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மற்றும் டிக்கெட்கள் அந்தந்த பஸ் நிலைய அரசு கவுன்டர்களில் உரிய கட்டணம் செலுத்தி டிக்கெட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பயணிகள் ஏறிய பின்பு அவை சார்ந்த டிக்கெட் குறித்த இன்வாய்ஸ்கள் டிரைவர்களிடம் ஒப்படைக்கப்படும். மாறாக நடத்துனர் இருக்கும் பஸ்களில் பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ்களைச் சரிபார்த்து அவைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்று பரிசோதித்து லக்கேஜ் மற்றும், அவர்களுக்கான டிக்கெட்களைக் கொடுத்துக் கட்டணம் வசூல் செய்வார். போக்குவரத்துச் சட்டப்படி இவை நடத்துனர்களுக்குத் தரப்பட்ட பணியாகும்.
 

ஆனால் கண்டக்டர் இல்லாத சிறப்பு பஸ்கள் செல்லும் வழித்தடங்களில் செக்கிங் இன்ஸ்பெக்டர் பஸ்சில் ஏறி பயணிகளிடம் சோதனை செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பரிச்சார்த்த ஒட்டம் நெல்லை – நாகர்கோவில், நாகர்கோவில் – நெல்லை வழித்தடத்தில் நடத்தப்பட்டது. அந்தப் பஸ்கள் நான்கு வழிச்சாலையில் செல்வதால் ஒரளவு சாத்தியப்பட்டது. அதன் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

 


ஆனால் நெல்லை - தூத்துக்குடி மற்றும் நெல்லை – தென்காசி வழிச்சாலைகள் நெடுஞ்சாலை என்பதால், முக்கியமான அந்த நகரங்களுக்குச் செல்லும் இது போன்ற கண்டக்டர் இல்லா பஸ்களில் வழியோரத்திலிருக்கும் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பயணிகள் இறங்குவர், பஸ்களில் ஏறவும் செய்வார்கள். இது போன்ற நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றாமல் தவிர்த்தால் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாயும் பாதிக்கும், மேலும் அவர்கள் கொண்டு வரும் சந்தேகத்திற்கிடமான பொருட்களைச் சோதனையிடவும் முடியாது. அவ்வாறு டிரைவர் செயல்பட்டால் கால நேரம் விரையமாகும். எனவே இது நடைமுறைக்குச் சாத்தியப்படாத ஒன்று. தவிர, விதிப்படி பேருந்துகளுக்கான நடத்துனர் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருப்பவர்களின் நிலையும் கேள்விக்குறியாக உள்ளது.
 

 

 

இது தொடர்பாக போக்குவரத்துக் கழகத்தின் முக்கிய தொழிற்சங்கத்தின் தொழிலாளர்கள் சொல்லுவது,

மேட்டார் வாகனச்சட்டத்தின்படி கண்டக்டர்களுக்கென்று தனிப்பணி உள்ளது. அப் பணிக்கு வருபவர்கள் விபத்து மற்றும் அவசர காலங்களில் பயணிகளுக்கு உதவும் வகையில் முதல் உதவி பயிற்சி பெற்ற பிறகே அவர்களுக்கு கண்டக்டர் உரிமம் தரப்படுகிறது. மேலும் டிரைவர்களுக்கு அவசரகாலத்தில் உதவுவது, பயணிகளுக்கு உரிய முதலுதவி சிகிச்சை தருவதோடு அவர்களைப் பாதுகாப்பது, மேலும் அவர்கள் கொண்டு வருகிற பொருட்களைக் சோதனையிட்டு தடை செய்த பொருட்களைத் தவிர்ப்பது உள்ளிட்டவைகள் கண்டக்டர்களின் பணியாகும். ஆனால் போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கண்டக்டர் இன்றி பஸ்களை இயக்கும் டிரைவர்களுக்கு பணிச்சுமையும், மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணிகளின் பொருட்களை சோதனையிடவும் முடியாத நிலை ஏற்படும். அதனால் தடை செய்யப்பட்ட பொருட்கள், வெடி பொருட்களும் கடத்துவதற்கும் வாய்ப்பாகிவிடும். இந்த சிஸ்டம் சரியில்லை என எச்சரிக்கையோடு குறிப்படுகின்றனர்.
 

வருவாய் முக்கியமல்ல. பயணப்படும் பயணிகளின் உயிர்களுக்கான பாதுகாப்பும் அடங்கியிருப்பது தான் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட வேண்டிய விஷயம்.
 

 

 

 
 

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.