Skip to main content

ரஜினிகாந்த் பச்சைத்தமிழனா... யாரோ பெயிண்ட் அடிச்சி விட்டுட்டான் போல-சீமான்

Published on 09/05/2018 | Edited on 09/05/2018

கடந்த மாதம் 29-ஆம் நாள் கண்ணகி பெருவிழாவானது தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்றது.  நாம் தமிழர் கட்சி தலைமை சார்பில் நடந்த கண்ணகி பெருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேருரை ஆற்றினார். அப்போது அரசியல் மற்றும் தமிழ் தேசியம் மலரவேண்டிய அவசியம் பற்றி பேசினார், இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்.
 

seeman

 

அப்போது சீமான் பேசுகையில்,   

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலார். பயிருக்கும் உயிர் இருக்கு என்று வாடினார் அதனால்தான் தான் விதைத்த பயிர் வாடியவுடன் வரப்பிலிருந்து வேலைபார்த்த வேளான்குடிமகன் மரத்திலே வேட்டியை கயிறாக கட்டி தொங்கி இறந்துபோறான். தமிழர்களின் உயிர்மைநேயதிற்கு சான்று பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று மறைமலை சொன்ன வாக்கு. இதை வேதம் கற்பிக்கவில்லை ஆனால் என் முன்னோன் பாடினான் பிறப்பு ஒக்கும் எல்லா உயிருக்கும் என்று. பகுத்துண்டு பல் உறவுகள் ஓம்புக என்று தமிழ்மறை கற்பிக்கவில்லை பகுத்துண்டு பல் உயிர் ஓம்புக என்று பாடுது. எல்லா உயிர்களுக்கும் உணவளி என்று சொன்னது தமிழினம்தான். பாரி வந்து முல்லைக்கு தேர் கொடுத்தான் அது பைத்திக்காரதனம்தான் தேரை விட்டுட்டுபோயிருக்க கூடாது குச்சியை நட்டு முல்லைக்கொடியை காத்திருக்கலாம் ஆனால் இங்கு பார்க்கவேண்டியது அந்த தேருக்கும் மேலாக தெரிகின்ற பாரியின் உயிர்மைநேயத்தைதான். பேகன் மயிலுக்கு போர்வை கொடுத்தான் என்றால் அதில் தெரிவது உயிர்நேயம் தமிழர்களின் உயிர்நேயம். எல்லாரும் கல்லுமாவில் கோலம் போட்டுகொண்டிருந்த நேரத்தில் ஈயும்,எறும்பும் பசியாற்ற வேண்டுமென்று அரிசிமாவில் கோலம் போட்டவர்கள் நாம். ஈயிற்கும் எறும்புக்கும் உயிர் இருக்கு அவைகளுக்கும் உணவளிக்கவேண்டும் என நினைத்தவன்தான் தமிழன்.
 

seeman

 
ரஜினிகாந்த் ஒரு பச்சைத்தமிழனா... யாரோ ஒருவன் பெயிண்ட் அடிச்சி விட்டுட்டான் போல. சொந்த இனத்திற்கே உண்மையா இல்லாதவர் வேறு எந்த இனத்துக்க உண்மையாக இருப்பார். என்னை எங்க கொண்டு நிறுத்தினாலும் நான் சொல்லுவேன் என்னை அடித்து உதைத்தாலும் சொல்லுவேன் நான் தமிழன் என்று. நீங்கள் இனம் மாறுவது எங்களோடு வாழ்வதற்கா? இல்லை எங்களை ஆள்வதற்கா? என்னோடு வாழ்வதற்கு நீ நீயாகவே இரு. தமிழர்கள் மனிதநேயவாதிகள் அல்ல தமிழர்கள் உரிமைநேயர்கள். தமிழர்கள் போல உயிர்மைநேயம் கொண்டவர்கள் உலக வரலாற்றிலேயே இல்லை. 

 

என் பெரும்புலவன் பாரதி சொல்லும்போது ''காக்கை குருவியும் எங்கள் சாதி நீர்கடலும் மலையும் எங்கள் கூட்டம்'' என்று சொல்கிறான்.  காக்கையும் குருவியும் நம்ம சாதிதாண்டா அப்படி வாழ்ந்த ஒரு கூட்டம் சகமனிதனை எப்படி வெறுப்போம் என்பதை நினைத்து பார்க்கவேண்டும். டென்மார்க்கில் வழும் தமிழர்களுக்காக அந்த நாட்டு அரசு உங்கள் தாய்மொழியை மறந்துவிட்டால் உங்கள் இனம் அழிந்துவிடும் என்று 32 பள்ளிக்கூடங்களை கட்டிக்கொடுத்துள்ளது. தமிழ் கற்பியுங்கள் என பள்ளிகூடம் கட்டி ஆசிரியர்பணிக்கு ஆட்களை நியமித்து அவர்களுக்கு சம்பளம் வேற தருகிறது அந்தநாடு. அதை நாங்க இங்க செய்யமாட்டோமா.
 

seeman

 

நீ என்னவாக இருக்கிறாயோ அந்த அடையாளத்தோடு,மொழியோடு, கலை பண்பாட்டோடு வா ஆனா என்னை ஆளவேண்டும் என்று மட்டும் நினைக்காதே. என் தம்பிமார்கள் குறிப்பிட்டது போல நாம் தமிழர் கட்சியின் அரசியல் எல்லாம் உயிர்களுக்குமானது. நாம் தமிழர் கட்சியின் அரசியல் இந்த மண்ணில் வாழக்கூடிய எல்லா மக்களுக்குமானது. தலைமை அதிகாரம் எப்போதும் மக்களுக்கானது. என் தாய்மொழி சாவதை பற்றி கன்னடர்கள் கவலைப்படமாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் மொழி, பண்பாட்டுமரபை காப்பாற்ற அவர்களுக்குகென்று ஒரு மாநிலம் இருக்கிறது. என் தாய்மொழி சாவதை பற்றி மலையாளிகள் கவலைப்படமாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு அவர்களுடைய மொழியை காப்பாற்ற ஒரு மாநிலம் இருக்கிறது. என் மொழி சாவதை பற்றி மராட்டியருக்கும் பீகாரியருக்கும் கவலை இருக்காது ஆனால் நான் கவலைப்படுவேன். தமிழனுக்கு ஒரு இடம்தான் இருக்கு இதை விட்டுவிட்டால் நாம் மீள்வதற்கும் மக்களோடு வாழ்வதற்கும் நமக்கு வாய்ப்பில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாக கூடி வாழ்வோம் ஆனால் தமிழர்கள்தான் தாய் நிலத்தை ஆள்வோம். வாழும் உரிமை எல்லோருக்கும் உண்டு ஆனால் ஆளும் உரிமை தமிழர்களுக்கு மட்டும் தான் உண்டு. 

 

அறத்தின் வழியில் நின்று ஆள்கின்ற ஆட்சியே வேண்டும் என் தமிழ் நிலத்தில், அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என இளங்கோ பெருந்தகை பாடியது போல எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி கூர்ந்து கவனிக்க வேண்டும் உறவுகளே எங்கள் நாட்டில் எங்கள் ஆட்சி என்று பதிவு செய்யவில்லை ''எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி''.  தமிழனிடம் கொடுத்துப்பாரு ஒரு ஐந்து ஆறு வருடம் அப்படி விட்டுபாரு என்ன நடக்குது என்று பாரு. உலகத்தின் தலைசிறந்த நாடாக பூமியின் சொர்க்கமாக என் தாயகம் புகழ்படைக்குமா என்று பாரு. தொலைக்காட்சி விவாதத்தில் யார் யார் எல்லாம் தமிழன் என்றால் என்ன அர்த்தம் தமிழர் யார் என்று தெரியாமல் நம்மை ஆக்கிவிட்டார்கள் என்றும் அர்த்தம். நீ முல்லைப்பெரியாற்றில் தண்ணி கேளு மலையாளிக்கு தெரியும் யார் யார் தமிழனென்று சரியாக அடிப்பான். காவிரியில் தண்ணி கேளு அங்கு வாழும் தமிழர்களை தேடி சரியாக அடிக்கிறான். அப்ப அவனுக்கு தெரியுது யார் தமிழனென்று நமக்கு தெரியவில்லை யாரு தமிழன் என்று நக்கல், கேலி, கிண்டல்.
 

seeman

 

திராவிடர்கள்தான் தமிழர், தமிழர்தான் திராவிடர்கள், தமிழர்கள் ஏன் திராவிடர்களாக வேண்டும் தமிழர்கள் தமிழர்களகளாவே இருக்கவேண்டும். தமிழர் என்ற சொல்லே திரிந்து திராவிடர் என்றானது, திரிந்த பாலையே நாங்க பயன்படுத்தவில்லை திரிந்த சொல்லை ஏன் பயன்படுத்தனும். நாங்கள் ஒன்றுமே சொல்லவில்லை நாங்கள் தமிழர்கள் என்றுதான் முன்வைக்கிறோம் ஆனால் அதற்கு எவ்வளவு பேர் வெந்நீரை காலில் ஊத்தி கொண்டு குதிக்கிறான். தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டுமா... தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டுமா... ஆமாண்டா தமிழர் தான் ஆள வேண்டும். தமிழர் நாட்டை தமிழன் ஆள்வதுதான் தமிழ்நாட்டின் தேசிய உரிமை. தமிழ் நாட்டை யார் வேண்டுமானலும் ஆளலாம் என்பது தேசியம் அல்ல அது வேசியம் அதை ஏற்கவே முடியாது. எனக்கு தாயும் ஒன்றுதான் என் தாய்நாடும் ஒன்றுதான். அப்பா சரியில்லை என்றால் வீட்டுல மூத்தவன் இருக்கான் குடும்பத்தை காப்பாத்தி கொண்டுபோவான். அதற்காக அடுத்த வீட்டுக்காரன என் வீட்டில வைக்க முடியாது, அது மனங்கெட்ட செயல். செத்தாலும் சாவானே தவிர அடுத்தவன் காலை நக்கி பிழைக்கிற ஈனப்பிழைப்பை தமிழ்மகன் ஒருபோதும் செய்யமாட்டான். கழுத்தை அறுத்துக்கொண்டு சாவானே தவிர அப்படியொன்றை ஒருபோதும் தமிழன் செய்யமாட்டான். சேகுவாரா சொல்கிறான் ஒருவன் காலில் விழுந்து தான் நீ பிழைக்க வேண்டிய நிலை இருந்தால் நீ எழுந்து நின்று இறந்து போ என்கிறான். என் தலைவன் கற்பிக்கிறான் சரணடைந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவது மேலானது போராடாம இருந்தாலும் இறந்துபோவாய் போராடினாலும் இறந்துபோவாய் ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கு அதானல் போராடியாவது இறந்து போ. 

 

ஹச்.ராஜா சொல்றாரு இந்துதான் தமிழன். இதை எங்கவச்சு ஆராய்ச்சிபண்ணி கண்டுபிடித்தார் என்று தெரியல. அப்ப அமித்ஷா தமிழரா, ஹச்.ராஜா தமிழரா என்று கேட்டா பதிலில்ல ஆவுன்னா நான் கும்பகோணம் போறேன் கும்பகோணம் போறேன்னு இவங்களுக்கு இந்த கும்பகோண களம் ஒன்று மாட்டிக்கிச்சு. நாட்டை ரஜினிகாந்த் கிட்ட கொடு, இல்ல கமல்கிட்ட கொடு இல்ல செயல் தலைவர் ஸ்டாலினிடம் இல்ல தினகரன்கிட்ட கூட நாட்டை கொடுத்துதான் பாரு. நாங்க அப்படியே வேடிக்கை பாக்குறோம். நீ எவ்வளவு வேணாலும் போய் மேயி ஆனா மாட்ட கட்டிப்போட்ட மாதிரி முளைகுச்சி இங்க அடிச்சி வைச்சிருக்கும் அய்யயோ எல்லாம் கொள்ள அடிச்சுட்டாங்களேன்னு கடைசியில எங்கிட்டதான் வந்து நிக்கணும். எங்களை போல் பேரன்பு கொண்டு நேசிக்கிற கூட்டம் வேறு எங்கும் கிடையாது. எல்லா பிரச்சனையை சொல்லுவான் போராடுவான் தீர்வுகாண கூடிய வலிமை, ஆற்றல் எங்களிடம் தான் உள்ளது. காவிரில தண்ணீர் இல்ல எப்படி வரவைப்பது என்று எனக்கு தெரியும். மீனவனை கைது பண்றான் கைது பண்ணமா எப்படி தடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று பேசினார்.

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.