Skip to main content

மணல் மாஃபியாவிடம் பேரம் பேசிய அண்ணாமலை; கொள்கை இல்லாத எடப்பாடி; சிண்டு முடியும் நடிகை கஸ்தூரி!

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Rajagambiran Interview

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தும், பாஜக அரசியல் செயல்பாடுகள் குறித்தும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்தும், நடிகை கஸ்தூரியின் கருத்துக்களைப் பற்றியும் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பல்வேறு விதமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் நம் முன் வைக்கிறார். 

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைப் பொறுத்தவரை அவர் கட்சியின் தலைவராக நீடிப்பாரா இல்லையா என்பது தெரியாத நிலையில், அவருடைய எதிர்கால அரசியல் வாழ்க்கை இருண்டு போயிருக்கிற நிலையில், பாஜக தலைமைக்கே 5 மாநில தேர்தலின் மீது அச்சத்தில் இருக்கும் போது எதிர்காலம் ஒன்றே இல்லாமல் இருக்கிற அண்ணாமலை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். 

 

பாஜகவிற்கும் தமிழகத்திற்குமே சம்பந்தம் இல்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு பொறுப்பாளர்களை நியமிக்கிறோம் என்பது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவுமே தவிர, தேர்தலுக்கு உதவாது. கடந்த முறை தேர்தல் பொறுப்பாளராக இருந்த ஹெச்.ராஜா நான்கு கோடிக்கு வீடு கட்டினார் என்று பாஜக நிர்வாகிகளே கூறிக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Annamalai

 

3 சதவீதம் மட்டுமே வாக்கு வங்கி வைத்திருக்கிற பாஜக, அதை விட பத்து மடங்கு அதிக வாக்கு வங்கி வைத்திருக்கிற திமுகவிற்கு சரிசமம் என்று நினைத்துக் கொள்கிறது. பூனைக்குட்டிக்கும் புலிக்குட்டிக்குமான போட்டி என்பது இதுதான். ஓரமா போயி விளையாடுங்க உங்களுக்கு இங்கே களமே இல்லை. நீட்டிற்கு விலக்கு வாங்கி தந்தார்களா? தமிழக வளர்ச்சிக்கு எதாவது செய்தார்களா? தமிழகத்திற்கு பாஜக செய்தது என்னவென்று கேட்டால் இவர்களிடம் பதில் இல்லை. ஆருத்ரா வழியாக கோடிக்கணக்கான தொகை மோசடி செய்திருக்கிறார்கள் அதை காரணமாக சொல்லி ஓட்டு கேட்பார்களா? 

 

மோடி ஒன்பது ஆண்டுகளாக சாதனை செய்திருக்கிறார் என்கிறார்கள். அதுவும் மணிப்பூரில் கலவரம் பண்ணியிருக்கீங்க, காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாத்தியிருக்கீங்க, இதனால பல மாநில தேர்தலில் தோல்வி அடைஞ்சிருக்கீங்க. பிளவு அரசியல், சக மனிதன் மீது வெறுப்பு அரசியல் செய்ததை விட பாஜக செய்த சாதனை என்னவென்று கேட்டால் சொல்லத் தெரியாது. 

 

மணல் மாஃபியாக்களின் மீது ரெய்டு நடந்தது. அவர்களிடம் பாஜக தரப்பில் தேர்தல் நிதி தருமாறு கேட்டிருக்கிறார்கள். தர மறுக்கும் பட்சத்தில் அமலாக்கத்துறை, வருமானவரித் துறையினரைக் கொண்டு ரெய்டு நடத்துகிறார்கள். மணல் மாஃபியாக்களோ ரெய்டிற்கு பயந்து பெரும் தொகையினை கொடுக்கிறார்கள். அதனால் விடுவிக்கப்படுகிறார்கள். இதுதான் நடக்கிறது. பாஜகவின் ஒரு பிரிவாக அமலாக்கத்துறை செயல்படுகிறது. 

 

Eps

 

சிறுபான்மையின மக்களிடம் நம்பிக்கையை பெறுவதற்காக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி சிறையிலிருக்கும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கைதிகளின் விடுதலையைப் பற்றி பேசுகிறார். ஒரு சலசலப்பை உண்டாக்குகிறார். ஆனால் அவர் அதிமுக ஆட்சிக் காலத்தில் இது பற்றி பேசவில்லை. சிஏஏ சட்டத்திற்கு ஓட்டு போட்டவர்கள் இவர்கள் தான். எடப்பாடி பேசியதால் பெரும்பான்மை மக்களிடம் இந்த பிரச்சனை போய் சேர்ந்திருக்கிறது என்பதும் உண்மை தான். 

 

அதிமுகவிற்கு சிறுபான்மை வாக்கு வங்கி இருக்கிறது என்பது, இது இட்லி என்றால் சட்னி கூட நம்பாது என்று சொல்லும் நகைச்சுவைக்கு ஒப்பானது தான். அதிமுக என்ற கட்சியை காப்பாற்ற பாஜக உடன் கூட்டணி முறித்துக் கொண்டது என்பது ஒருபுறம் இருக்கும் பட்சத்தில், கூட்டணியில் பெரிய முடிவுகளை பாஜக எடுப்பதால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் கூட்டணி முறிந்தது என்பது தான் காரணமாகும். விதை இல்லாத பழம் என்பார்களே கொட்டை இல்லாத பழம் அதைப்போல கொள்கை இல்லாதவர்களே அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களாக உருவெடுத்தார்கள். கொள்கை சிக்கலால் இவர்கள் பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொள்ளவில்லை. 

 

Kasthuri

 

காவிரி பிரச்சனை என்பது பிரிட்டிஷ் காலத்திலிருந்து இருக்கிறது. காவிரி தண்ணீரை பிரித்துக் கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வோம் என்கிற அளவிற்கு அங்கே விவசாயிகளை மடைமாற்றி ஒரு இனவெறி அரசியல் செய்து வைத்திருக்கிறார்கள். அதற்கு மாற்றாக தமிழகத்திலும் அதற்கு இணையாக இனவெறியை உண்டாக்க வேண்டும் என்று சிலர் பேசுகிறார்கள். இது நியாயமில்லை. ஒரே நாட்டில் நதிநீர் பங்கீடு என்பது சட்ட ரீதியில் தான் சரி செய்து கொள்ள வேண்டும். இது குறித்தெல்லாம் காங்கிரசுக்கும் திமுகவிற்கும் இடையே சிண்டுமுடியுற வேலையை நடிகை கஸ்தூரி போன்றவர்கள் செய்கிறார்கள். பாஜகவின் வார்த்தையின் வேறு வடிவமாகத்தான் அவர் செயல்படுகிறார்.

 

நக்கீரனுக்கு அளித்த பேட்டியினை வீடியோ வடிவில் முழுமையாகக் காண....


 
 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.