Skip to main content

நந்தனாரின் புராணமும்; ஆளுநரின் சர்ச்சையும்! 

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

Purana of Nandanar; The governor's controversy!

 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவார் என்று அழைக்கப்படுபவர் நந்தனார். இவர், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்து ஆதனூரில் பிறந்துள்ளார். பட்டியல் சமூகத்தில் பிறந்த நந்தனார், சிவபெருமான் மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். ஒருநாள் மயிலாடுதுறையில் உள்ள ஆதனூரை அடுத்த திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றார். ஆனால் அந்தக் காலத்தில் நிலவிய தீண்டாமை கொடுமைகளால் அவரால் கோயிலுக்குள் சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. வெளியில் நின்றபடியே வணங்கி விடலாம் என்றால் நந்தி மறைத்து நின்றுள்ளது. சிவபெருமானை தரிசிக்க முடியாத சூழலில், மிகுந்த ஏக்கத்துடன் அழுது புலம்புகிறார் நந்தனார். அப்போது, தன் மீது உண்மையான பக்தி கொண்டிருந்த நந்தனார் தன்னை தரிசிக்க வேண்டி, குறுக்கே நின்ற நந்தியை ‘சற்று விலகி இரும் பிள்ளாய்’ என்று சிவபெருமான் உத்தரவிட்டுள்ளார். உடனே நந்தி சிறிது வலது புறமாக நகர்ந்துகொள்ள, கருவறையில் இருந்த இறைவனை நந்தனார் கண்டு வணங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இன்றைக்கும் அந்த கோயிலில் நந்தி சற்று விலகியே இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் நீட்சிதான் எனப் பலர் சொல்லுகின்றனர்.

 

அதைப் போலவே, சிதம்பரம் நடராஜ பெருமானை தரிசிக்க வேண்டும் என்பது நந்தனாருக்கு பெரும் கனவாக இருந்துள்ளது. ஆனால், அப்போது இருந்த சாதி கட்டுப்பாடுகளால் நந்தனாரால் பெருமாளை நேரில் சென்று தரிசிக்க முடியவில்லை எனச் சொல்லப்படுகிறது. சிதம்பரத்துக்கு நாளைக்குப் போவேன்... நாளைக்குப் போவேன் என்று.. ஒவ்வொரு நாளும் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு நடராஜரை மனதிலேயே வணங்கி வந்துள்ளார். அதனாலேயே அவர் திருநாளைப் போவார் நாயனார் என அழைக்கப்பட்டார். பின்னர் ஒருநாள் தீட்சிதர் கனவில் தோன்றிய இறைவன் நந்தனாரை அழைத்து வரச் சொன்னதாகவும் கனகசபையில் ஆடும் நடராஜரை தரிசனம் செய்து இறைவனோடு கலந்துவிடுவதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதில், கோவிலுக்குள் நந்தனார் வந்த தெற்கு வாசல் தற்போதும் தில்லை கோவிலில் மூடப்பட்டுள்ளது. அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் அவர் வந்த பாதையை அடைத்து வைத்துள்ளனர் என இன்னமும் விமர்சிக்கப்படுகிறது. இது தீண்டாமைச் சுவர் எனப் பல்வேறு தரப்பு மக்களால் ஆட்சேபிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அந்த சுவரை அகற்றியே ஆக வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பல தரப்பு மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழ்த் தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, தில்லையில் சிலர் நந்தனாரை தீயிட்டுக் கொளுத்திவிட்டு பின்னர் இறைவனோடு கலந்துவிட்டதாகக் கூறுகின்றனர் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

 

Purana of Nandanar; The governor's controversy!

 

நந்தனாரை பற்றிய இந்த முன்கதையை வைத்துக்கொண்டு ஆளுநரின் பூணூல் அணிவிப்பு நிகழ்ச்சியை முற்போக்காளர்களும் முக்கிய அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  

 

அக்டோபர் 4ம் தேதி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில், திருநாளைப்போவார் அவதார ஸ்தலத்தில் தமிழ் சேவா சங்கமும், சிவகுலத்தார் அறக்கட்டளையும் இணைந்து நந்தனார் குருபூஜை நடத்தினர். காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நந்தனாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலையில் கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பட்டியலினத்தவர்கள் நூறு பேருக்கு உபநயனம் செய்து, பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். ஸோகோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாகப் பட்டியலினத்தவருக்கு பூணூல் போடுவதன் மூலம் ஆளுநர் என்ன சொல்ல வருகிறார். பூணூல் போடுவதன் மூலம் அவர்களை உயர்த்திவிடலாம் எனக் கூறினால்; பூணூல் போடாதவர்களை தாழ்ந்தவர்கள் கீழானவர்கள் எனச் சொல்ல வருகிறாரா? ஒருவேளை ஆளுநர் உண்மையிலேயே சமூக நீதி அடிப்படையில் அனைவரும் சமம் என சிந்தித்தால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு பூணூல் போடுவதற்குப் பதிலாக, பூணூல் போட்டிருப்பவர்களை கழட்டச் சொல்லிவிட்டால், அனைவரும் சமமாகி விடலாமே என்கின்றனர் இந்த நிகழ்வை விமர்சிப்பவர்கள்.

 

Purana of Nandanar; The governor's controversy!

 

மேலும், தில்லை தெற்கு மதில் சுவர் தீண்டாமைச் சுவராகப் பார்க்கப்பட்டு வரும் வேளையில், அதை ஆளுநர் அகற்றி அனைவரையும் அந்த வழியில் அழைத்துச் செல்லத் தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், “ஆதனூரில் 100 பட்டியலினத்தவர்களுக்குப் பூணூல் அணிவிக்கிறாராம் ஆளுநர் சனாதனி ஆர்.என். ரவி. 

 

இது மேன்மைப்படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும்.  இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? அத்துடன் ஆளுநர், நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம். நாடாண்ட மன்னன் நந்தனை மாடு தின்னும் புலையன் என இழிவுபடுத்தும் பெரியபுராணக் கட்டுக் கதைகளைப் புறந்தள்ளுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“பாசிச சக்திகளின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க பாடுபடுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
We will strive to stop the abuse of power by fascist forces CM MK Stalin

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சராக பொன்முடி பதவியேற்றதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

We will strive to stop the abuse of power by fascist forces CM MK Stalin

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.