Skip to main content

மக்கள் பேரலை சுனாமியாக எழுந்தால் அரசு தூக்கியெறியப்படும்!

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

நாம் சுதந்திர நாட்டில்தான் இருக்கிறோமா? அல்லது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திற்கு சென்றுவிட்டோமா? என்ற குழப்பம் கடந்த மூன்று நாட்களாக வாட்டி வதைக்கிறது.
 

பிரிட்டிஷ் கம்பெனிகளுக்கு ஆதரவாக அன்றைய அரசு மக்களை வாட்டி வதைத்தது. இந்தியாவின் உள்நாட்டு தொழில்கள் நசுக்கப்படுவதை கண்டித்து நடந்த போராட்டங்களை துப்பாக்கி முனையில் ஒடுக்கியது பிரிட்டிஷ் அரசு. ஆனால், தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் குறித்து செய்தி வெளியிட பிரிட்டிஷ் அரசு தடை விதித்ததே இல்லை.
 

அதுபோல, எவ்வளவு பெரிய கலவரங்கள் நடைபெற்றாலும் அரசியல் தலைவர்கள் மக்களைச் சந்திக்க அனுமதி மறுத்ததே இல்லை.
 

tuty

 

ஆனால், நாடு விடுதலைப் பெற்றபிறகு ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் முன்னின்று நடத்திய மதக்கலவரத்தில் மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது கலவரப்பகுதிக்கு செல்ல காந்தி புறப்பட்டார். அவருடைய முடிவை கைவிட வேண்டும் என்று விடுதலைப் பெற்ற இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார். நவகாளி யாத்திரையை அவர் தொடங்கினார். அதன்பிறகே அங்கு அமைதி திரும்ப அரசு நடவடிக்கை எடுத்தது.
 

ஆனால், ஒரு நகரில் பெரும்பகுதி மக்களை விஷக்கொல்லியாய் மெல்லக் கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராடும் மக்களை குருவிகளைப்போல தமிழகக் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாய் கொன்று குவித்திருக்கிறது. ஒரு குஜராத்தி முதலாளியின் நிறுவனத்தை காப்பாற்ற பிரதமர் மோடி மூலமாக உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. அந்த விருப்பத்தை நிறைவேற்றும் ஏவல் துறையாய் போலீஸ் செயல்பட்டு வருகிறது. 
 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுவிட்டது என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டால் முடிந்திருக்கக்கூடிய போராட்டத்தை ரத்தக்களறியாக்கி தனது கையாலாகாத்தனத்தை எடப்பாடி அரசு வெளிப்படுத்தி இருக்கிறது. மாநில முதல்வரும் அமைச்சர்களும் வாய்மூடி மவுனிகளாய் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லப்போன எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குப்போடும் நிலைதான் இருக்கிறது.
 

police

அமைச்சர்களும் மக்களைச் சந்திக்காமல், எதிர்க்கட்சித் தலைவர்களையும் மக்களைச் சந்திக்க விடாமல் செய்யும் இது சர்வாதிகார நாட்டில்தான் நடக்கும். போலீஸ் படை மட்டுமே தூத்துக்குடி நகரில் வீதிவீதியாக வீடுவீடாக புகுந்து கொடூரமான தாக்குதலில் ஈடுபடுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
 

போலீஸ் இப்போது எடப்பாடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
 

சமீபத்தில் பெண் பத்திரிகையாளர்களை பற்றி கேவலாமாக கருத்துத் தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகரை கைதுசெய்ய முடியாமல் இருந்த கையாலாகாத காவல்துறை அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொல்வதும், இரவோடு இரவாக வீடுகளுக்குள் புகுந்து கொடூரமாக தாக்குதல் நடத்துவதும்தான் வீரமா என்று பொதுமக்கள் வினா எழுப்புகிறார்கள்.
 

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினையே சந்திக்க முதல்வர் மறுப்பது, ஜனநாயகக் கேலிக்கூத்தாகும். எதையும் போலீஸ் அடக்குமுறையை கையாண்டு அடக்கிவிடலாம் என்று நினைப்பது அரசின் முட்டாள்தனம் என்று அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
 

edappadi

 

தமிழ்நாடு கொந்தளிக்கும் நிலையில் இருப்பதை சற்றும் உணராமல் போலீஸ் பாதுகாப்பில் பதவியில் நீடிக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்தால் அது நிச்சயமாக ரொம்பநாள் நீடிக்காது என்பதே நிஜம். ஏனெனில் சாது மிரண்டால் காடுகொள்ளாது என்பது பழமொழி.
 

மூன்று மாவட்டங்களை இணையத்தொடர்பில் இருந்து துண்டித்துவிட்டு போலீஸ் வெறியாட்டம் நீடிப்பதை தமிழகத்தின் மற்ற மாவட்டத்து மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மக்கள் அலை சுனாமியாக எழுந்தால் எடப்பாடி அரசாங்கத்தை சுருட்டி விழுங்கித் துப்பிவிடும் என்பதே உண்மை.

 

 

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.