Skip to main content

தொடர்ந்து ஒலிக்கும் நக்கீரன் அலுவலகத் தொலைபேசி!

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

ஒரு இடைவேளைக்குப் பிறகு இன்று நக்கீரன் அலுவலகத்தின் தொலைபேசி தொடர்ந்து ஒலிக்கிறது, மின்னஞ்சல்பெட்டி நிறைந்துள்ளது. தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரும் நக்கீரன் ஆசிரியர் பேசிய வீடியோவை குறிப்பிட்டுப் பேசுகின்றனர்; பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நடைபெற்று இன்று உலகுக்குத் தெரியவந்திருக்கும் கொடூரத்தை திரும்பிப்பார்க்க வைத்ததில் நக்கீரனின் பங்கை பாராட்டுகின்றனர்; அந்தப் பாவிகளுக்கு என்ன தண்டனை வழங்கவேண்டுமென்று கொந்தளிக்கின்றனர்; அரசியலும் அதிகாரமும் சேர்ந்து முந்தைய பல வழக்குகளைப் போல இதையும் விட்டுவிடுமோ என்று அஞ்சுகின்றனர்; நக்கீரன் இந்தப் பிரச்சனையை விட்டுவிடக் கூடாதென்று கேட்டுக்கொள்கின்றனர்.

பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நடந்து, ஒரு தைரியமான பெண்ணின் புகாரால் வெளிவந்திருக்கும் இந்தக் கொடுமை அமைதியாகக் கடந்து போய்விடப்படும் அபாயம் இருந்தது. இதில் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளிகளின் உறவுகள் தப்பிக்க, மேல் அடுக்கில் இருந்த சில குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மட்டும்தான் குற்றவாளிகள் என்பதுபோல் காட்டுகிறது காவல்துறை. அவர்களுக்குப் பின் இருப்பவர்கள் பெயர் உச்சரிக்கப்படாமலேயே இருந்தது. நக்கீரன் ஆசிரியர் பேசிய வீடியோவில் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு இந்தக்  கொடூரத்தில் இருக்கக்கூடிய தொடர்பு குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். நம்மை தொலைபேசியில் அழைத்த சிலர் அதையும் குறிப்பிட்டு வாழ்த்துகின்றனர். இன்னும் சிலர், இந்தக் குற்றத்தில் இன்னும் பலருக்குத் தொடர்புள்ளது என்றும் பல கோடி ரூபாய் பணம் சார்ந்த விஷயமாக இது நடைபெற்றுள்ளது என்றும் தகவல்களைத் தருகின்றனர்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்குக் கொண்டு செல்ல முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் அவருக்குப் பின் இருக்கும் பெரும்புள்ளிகளை வெளிக்கொண்டுவரவும் நிர்மலாதேவியின் உயிருக்கு இருக்கும் ஆபத்தை உலகுக்குத் தெரியப்படுத்துவதில் நக்கீரன் காட்டிய வேகமும் அதனால் எதிர்கொண்டதும் அனைவரும் அறிந்ததே. இன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் உண்மைகளைப் பேசினால், பல பெருந்தலைகள் இந்தப் பிரச்சனையில் உருளலாம்.

நக்கீரனின் இந்த வீடியோவின் வீச்சு, சமூக ஊடகங்களில் இந்தக் கொடுஞ்செயலுகெதிரான தீயைப் பற்றவைத்துள்ளது. பிரபலங்களை இது குறித்துப் பேச வைத்துள்ளது. மதியம் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய அரசு, மாலை சிபிஐ விசாரணைக்கு மாற்ற ஆலோசிக்கிறது. இன்னொரு புறம் இந்த வழக்குக்குப் பொறுப்பான கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன், 'இந்த வழக்கில் அரசியல் பின்புலம் எதுவும் இல்லை, வெறும் நான்கு வீடியோக்கள் மட்டுமே கிடைத்துள்ளது' என்று உறுதியாகக் கூறுகிறார். பாண்டியராஜன், திருப்பூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரு பெண்ணை முரட்டுத் தனமாகத் தாக்கி ஆள்வோரின் அபிமானத்தைப் பெற்றவர். சமீப ஆண்டுகளில் தமிழகத்தின் கல்லூரி மாணவிகளும் இளம் பெண்களும் எதிர்கொண்டு வரும் இத்தகைய புதிய வகை அச்சுறுத்தல்கள், கொடுமைகளின் பின்னணியில் உள்ளவர்களின் முகத்தை நக்கீரன் உலகுக்குக் காட்டும். இதற்குக் கிடைக்கும் வாசகர்களின் ஆதரவு மட்டுமே நக்கீரனின் பலம்.

support@nakkheeran.in   

 

Next Story

“அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பதைப்போல் இது மோடியின் புளுகு” - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Chief Minister M.K.Stal's criticized prime minister modi

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13-03-24) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். அதன் பிறகு, பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற அவர், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 57,325 பேருக்கு ரூ.1,273 கோடி செலவில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அதே போல், ரூ.490 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். 

அதன் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோவை மாவட்டத்துக்கு 13 புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடுகிறேன். அதில், தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பை நீக்க ரூ.14 கோடி நிதி வழங்கப்படும். தென்னை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் சாலை அமைத்து தரப்படும். பெரியநாயக்கன்பாளையம் உட்பட 4 ஊராட்சி ஒன்றியத்தில் பாலங்கள் கட்டித் தரப்படும். 

ரூ.2.8 கோடி செலவில் 3 லட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அதே போல், ஈரோடு மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். ஈரோட்டில் ரூ.15 கோடி செலவில் வ.உ.சி பூங்கா தரம் உயர்த்தப்படும். 8 சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும். மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்படும். 

வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா?. அதிமுக ஆட்சியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த அமைச்சர்கள், மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன?. மேற்கு மண்டலம் எங்கள் கோட்டை என்று கூறும் அதிமுக மக்களுக்கு என்ன செய்தது?. பெற்றோரை பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்க முடியுமா?. கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அமைச்சரும், டி.ஜி.பியும் இருந்தது யார் ஆட்சியில்?. தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. கோடநாடு பங்களாவில் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான். 

அதிமுக, பா.ஜ.க கள்ளக்கூட்டணிக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக கூட்டணி உள்ளது. நாட்டுமக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர், மோடியின் உத்தரவாதம் என பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார். தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்று பட்டியல் போட்டு பிரதமரிடம் மக்கள் கேட்க வேண்டும். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போதல்லாம், மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தை திமுக எதிர்க்கிறது என்று கூறுகிறார். எந்த திட்டத்துக்கு நான் தடையாக இருந்தேன் என்று பிரதமர் சொல்ல முடியுமா? ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு தடுப்பதாக பிரதமர் மோடி கூறியது அப்பட்டமான பொய். அண்ட புளுகு ஆகாச புளுகு என்பதைபோல் இது மோடியின் புளுகு. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட நாங்கள் தடுத்தோமா? அல்லது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தடுத்தார்களா? பா.ஜ.க.வின் பொய்யும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது” என்று கூறினார். 

Next Story

சிக்கிய கூடுதல் வீடியோக்கள்; 2 வருடம் கழித்து தலை காட்டிய பொள்ளாச்சி கொடூரர்கள்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
More videos stuck; Pollachi case

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நகையை பறித்ததாக கடந்த 2019 -ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் பல பெண்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது சில வீடியோக்கள் மூலம் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் திருநாவுக்கரசு என்கிறவன் முக்கிய குற்றவாளியாகவும், அதைத் தொடர்ந்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் என மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது.

தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட போராட்டங்களின் விளைவாக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ், அருளானந்தம், ஹெரன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வழக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இன்று சேலம் மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு 9 பேரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நடைபெற்று வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை தவிர்த்து வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட கூடுதல் வீடியோ ஆதாரங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. குறிப்பாக இன்றைய தினம் 30 வீடியோக்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.