Skip to main content

அண்ணனாக இருந்த கலைஞர், தாயான தருணம்! - வைகோ பகிர்ந்த நெகிழ்ச்சி நினைவு

Published on 06/08/2018 | Edited on 06/08/2018

மதிமுக தலைவர் வைகோ, கலைஞருடனான தன் நெகிழ்ச்சியான தருணங்களை கடந்த ஆண்டு ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டார். அதில் ஒரு பகுதி...

 

vaiko speech



"நான் திமுகவில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்த பிறகு ஒரு முறை சிகிச்சைக்காக வேலூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அந்த சமயம் கலைஞர் சுற்றுப் பயணத்துக்காக திருநெல்வேலி வருகிறார். நான் டாக்டரிடம் சொன்னேன், "நான் செல்ல வேண்டும், தலைவர் என் ஊருக்கு வருகிறார்" என்று. டாக்டர் சொல்லிவிட்டார், "நீங்கள் இன்னும் ஒன்றரை மாதம் எங்கும் செல்லக்கூடாது...". நான் கேட்கவில்லை, புறப்பட்டுவிட்டேன். எந்த ரயில் நிலையம் வந்தாலும் கலைஞர் வெளியே வருவார், கழகத் தோழர்களை சந்திக்க. சங்கரன்கோவில் ரயில் நிலையம் வந்தது, கலைஞர் வெளியே வந்தார். நான் சால்வையோடு நின்று கொண்டு இருந்தேன். தலைவர் பார்த்தார். என்னை ரயிலில் ஏறச்  சொன்னார், நானும் ஏறினேன். பிறகு என்னிடம் கேட்டார் 'என்ன இவ்ளோ மெலிந்து போய்ட்டீர்கள்?'. நான், 'இல்லை கொஞ்சம் உடம்பு சரியில்லை' என்றேன்.

 

 


பிறகு குற்றாலத்துக்குச் சென்று அறையில் தங்கினோம். கலைஞரின் பர்சனல் டாக்டர் என் அறைக்கு வந்தார். 'நீங்கள் என்ன கலைஞர்க்கு நெருக்கமானவரா?' என்றார். 'இல்லை' என்றேன். டாக்டர் சொன்னார், 'அவர் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பால் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாயிற்று' என்றார். பிறகு எல்லாரும் ஊருக்குச் சென்று விட்டனர். கவிஞர் கருணாநந்தமிடம் இருந்து அழைப்பு வருகிறது. 'முதலமைச்சர் உத்தரவு நீங்கள் உடனடியாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு போக வேண்டும்' என்கிறார். நான் உடனே சி.எம்.சி.க்கு  சென்றேன். நான்கு வாரங்கள் கழித்து கலைஞர் வேலூர் வந்தார். சால்வை கொண்டு வரவேற்றேன். அவர் அப்பொழுது ஒன்றும் பேசவில்லை. பிறகு தனியாய் அழைத்து "நீ எப்படி சி.எம்.சி. வந்த தெரியுமா? டாக்டர்கிட்ட பேசிட்டுதான் உங்களை அங்க போகச் சொல்லும்படி சொன்னேன் தெரியுமா?" என்றார். "இது வரைக்கும் உங்களுக்கு நான் கடிதம் எழுதினது இல்லை. 'தாய் என்று சாலம் பரிந்து' என்று தொடங்கி ஏழு பக்கம் எழுதி உங்களுக்கு கடிதம் அனுப்பினேன் அண்ணன்" என்றேன். நலம் விசாரித்துவிட்டு சென்றுவிட்டார்.

  kalaingar with vaiko



பிறகு ஒரு வாரம் கழித்து அவரது வீட்டுக்குச் சென்றேன். கருப்பணன், கலைஞரின் பி.ஏ "சார் என்ன சார் இது... வேலூரில் வந்தாரு துப்பாக்கி எடுத்து சுடாத குறைதான். வைகோ கடிதம் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள என் டேபிள் வரணும் என்றார். நாங்க எப்படியோ கண்டுபிடிச்சு வச்சிட்டோம்" என்றார். 1988ஆம் ஆண்டு 'ரத்தம் கசியும் இதயம்' நூலுக்கு அணிந்துரை எழுதினார், 'என் தம்பிக்கு உடல் நலம் குறைவு என்று பதறிப்போனேன். வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன், அவன் குணமானான், அன்று வரை அண்ணனாக இருந்த நான் அவனுக்கு தாயும் ஆனேன்' என்று எழுதினார். கலிங்கப்பட்டி எனும் கிராமத்தில் இருந்து வந்த என்னை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த நன்றி என் உதிரத்தோடு கலந்திருக்கிறது."

 

 

 

 

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.