Skip to main content

தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு! தமிழ்க் கையெழுத்து விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ்.! 

Published on 02/10/2018 | Edited on 03/10/2018
Makkal Pathai



மக்கள் பாதை இயக்கத்தின் சார்பாக தமிழ்க் கையெழுத்து விழா நடைபெற்றது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் நடைப்பெற்றது. 
 

காலை 9 மணிக்கு சகாயம் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள், முதியோர்கள், பள்ளி மாணவர்கள் என திரளாக ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இந்த கையெழுத்து இயக்கத்தை கின்னஸ் சாதனை முயற்சிக்காக வீடியோ பதிவு செய்தனர். 
 

இந்த விழாவில் பாரம்பரிய கலைநிகழ்ச்சி, பாரம்பரிய உணவு வகைகள், சந்தை அமைக்கப்பட்டது.
 

இந்த விழாவில் வேல்முருகன், பழநெடுமாறன், ஹரிபரந்தாமன், மணியரசன், அற்புதம்மாள், அய்யாக்கண்ணு, தியாகு, டி.வி.பிரகாஷ், கெளதமன், செல்வமணி என கலந்துகொண்டு  உரையாற்றினர்.
 

வேல்முருகன் பேசுகையில், "இந்த தமிழ் விழா மிக முக்கியமானது. இப்போதுள்ள நிலையில் இந்த விழா மிக அவசியமானது. நான் சட்டமன்றத்தில் இருந்தபோது கல்குவாரியில், மணல் குவாரிகள், கொள்ளை போவதை அறிந்து அதுதொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தேன். அப்போது சிறு சிறு நிறுவனத்திடமிருந்து காப்பாற்றி தற்போது பெரும் முதலாளியான கார்ப்பரேட் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளனர்.  
 

இந்த விசயத்தை அய்யா சகாயம் அவர்கள் தனி மனிதனாக நின்று போராட்டம் செய்து உள்ளார். எந்த சூழ்நிலையிலும் நேர்மையாகவும் உண்மைக்கும் நாட்டு மக்களின் நலனுக்காக யார் போராடினாலும் நாங்கள் துணை நிற்போம்" என்றார்.
 

பழநெடுமாறன் பேசியபோது, தமிழ் மொழி என்பது தனித்துவமான ஒன்று. அது நாடு முழுவதும் போற்றப்படும் மொழி, பேசப்படும் மொழி, ஆதி மொழி அந்த மொழிக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த விழா இருக்கிறது. இந்த விழா நிச்சயம் கின்னஸ் சாதனை படைக்கும். தமிழ் என்ற மொழியை எவராலும் அழிக்க முடியாது என்றார்.

 

Makkal Pathai


 

சகாயம் ஐ.ஏ.எஸ். பேசுகையில், "இந்த நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை படைக்க ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தமிழில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வு தமிழகத்திற்கான நிகழ்வு மட்டுமல்ல. உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் மூத்த தமிழ் சமூகதிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு" என தெரிவித்தார்.
 

மேலும், "இயக்கம் ஆரம்பித்தாலே அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் சமூகத்தை தட்டி எழுப்பும் ஒரு இயக்கமாகவே மக்கள் பாதை இருக்கும். தேர்தல் அரசியலை விட தமிழ் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியம் இருக்கிறது. நேர்மையான அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதே முக்கியம்" என்றார்.
 

ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் பேசுகையில், "நிச்சயமாக இது வரவேற்க வேண்டிய ஒன்று. இந்த நிலைமை முழுமையாக மாறவேண்டும் என்றால் தமிழில் கையெழுத்து போதாது, அனைத்து குழந்தைகளும் என்றைக்கு தமிழ் வழியில் பயில்கிறார்களோ அன்றைக்கு இது வெற்றிபெறும். தனி மனிதனாக நின்று போராட்டம் செய்த அரசு அதிகாரி என்றால் அது சகாயம்தான். வாழ்த்துகள்" என்றார்.
 

 

 

 

Next Story

மக்கள் பாதை குருதிக்கொடை பொறுப்பாளர் கரோனாவுக்கு உயிரிழப்பு!

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

Makkal pathai Blood Donor Corona passed away

 

தமிழ்நாட்டிலும் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறி இறப்பவர்கள் அதிகமாக உள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தாலுகா மருத்துவமனைகளில் கரோனா கவனிப்பு மையங்கள் கூட சரிவர செயல்படாத நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதிலும் அதிகமானோர் மூச்சுத்திணறலோடு வருவதால் ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் மூச்சு திணறலோடு  பல மணி நேரம் காத்திருந்து படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படும் நிலை உருவாகி உள்ளது. 

 

மற்றொரு பக்கம் கரோனா பரிசோதனை மற்றும் சி.டி ஸ்கேன் ரிப்போர்ட்கள் கிடைக்க ரொம்பவே தாமதம் ஏற்படுவதால் சிகிச்சைக்கும் தாமதம் ஏற்படுகிறது. ரிப்போர்ட் கிடைக்காமலேயே பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் பாதையின் மாவட்ட குருதிக்கொடை பொறுப்பாளர் முள்ளூர் ஞானபாண்டியன் (34), சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பரிசோதனைகளும் எடுக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடிதுடித்து இறந்துள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து பெட்டில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டிருந்தது.

 

Makkal pathai Blood Donor Corona passed away

 

சரியான சிகிச்சையின்றி ஞானபாண்டியன் இறந்துவிட்டதாக உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பிறகே அவருக்கான கரோனா பரிசோதனை முடிவு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் சடலம் உறவினர்களிடம் கொடுக்ககப்படாமல் போஸ்கநர் மின்மயானத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

இதுகுறித்து ஞானபாண்டியன் உறவினர்கள் கூறும் போது, ஞானபாண்டியன் மருத்துவக்கல்லூரி அருகிலேயே இருப்பதால் மக்கள் பாதை குருதிகொடை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து பல நூறு உயிர்களை காப்பாற்றி இருக்கிறார். ஆனால் தனக்கும் ரத்தம் குறைந்துவிட்டதாக அவரே தொடர்பு கொண்டு ரத்தம் கேட்டார். ஆனால் ரத்தம் தேவையில்லை என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இன்று சரியான கவனிப்பு இல்லை, ஆக்ஸிஜன் போதவில்லை. பரிசோதனை முடிவுகள் வராததால் சிகிச்சை அளிக்க தாமதம் என்கிறார்கள். 

 

பாண்டியன் மூச்சுத் திணறி இறந்த பிறகு உறவினர்கள் போராட்டம் நடத்திய பிறகு தான் கரோனா பாசிட்டிவ் என்கிறார்கள். இவ்வளவு கால தாமதமும் அலட்சியமும் பல உயிர்களை பலிவாங்கிவிடும் போல்  உள்ளது. புதிய அரசு உடனே கரோனா நோயாளிகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

 

மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, வரும் அனைத்து நோயாளிகளும் மூச்சுத்திணறலோடு வருகிறார்கள். இருக்கின்ற ஆக்சிஜனை தான் அவர்களுக்கு வழங்க முடிகிறது. இன்னும் கூடுதலாக அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது 8000 கி தேவைப்படுகிறது. அதேபோல கண்காணிப்பு மீட்டரும் தேவை அதிகமாக உள்ளது. மருத்துவப்பணியாளர்களின் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது என்றனர்.

 

 

Next Story

'மக்கள் பாதை' அமைப்பின் அடையாளங்களை சகாயம் இனி பயன்படுத்தக்கூடாது - நாகல்சாமி பேட்டி!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

Sakayam should no longer use the signs of the 'makkal pathai' system - Nagalsamy interview

 

சென்னை சேப்பாக்கத்தில் மக்கள் பாதை அமைப்பின் தலைவர் நாகல்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர்,

 

"மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டுதல் பொறுப்பிலிருந்து அவரை நீக்க முடிவு செய்துள்ளோம். முக்கிய முடிவுகளை எடுக்கும்பொழுது சகாயம் தனக்குப் பிடித்தவர்களுடன் மட்டும் ஆலோசனை நடத்தினார். மக்கள் பாதை அமைப்பை சகாயம்தான் நடத்தினார். ஆனால், தற்பொழுது அவர் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். மக்கள் பாதை அமைப்பின் அடையாளங்களை சகாயம் எங்கும் இனி பயன்படுத்தக்கூடாது" என்றார்.