
தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த பல்வேறு கருத்துகளை நம்மோடு அரசியல் செயற்பாட்டாளர் லயோலா மணிகண்டன் பகிர்ந்து கொள்கிறார்
இப்போது அரசியலில் ஒரு நகைச்சுவை நடிகர் என்றால் அது அண்ணாமலை தான். என்ன நோக்கத்திற்காக அவர் நடைபயணம் செல்கிறார் என்பதே தெரியவில்லை. திமுகவுக்கு எதிராக அவர் தொடங்கிய நடைபயணம், அதிமுகவுக்கு எதிரான ஒன்றாக மாறிவிட்டது. அண்ணாமலையும், செல்லூர் ராஜூவும் தினமும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலையை யாரும் மதிப்பதில்லை. அவருடைய நடைபயணத்துக்கு கூட்டமும் வருவதில்லை. போன் செய்து அழைத்தாலும் யாரும் வருவதில்லை. அதனால் மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார் அண்ணாமலை.
மக்கள் கொடுக்கும் மனுவை இவர்கள் தெருவில் எரிந்துவிட்டுச் செல்கின்றனர். பாதயாத்திரை தொடங்கி 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவர்கள் இதுவரை 50 கிலோமீட்டர்கள் கூட நடக்கவில்லை. மக்கள் இவர்களைப் பார்த்தாலே சிரிக்கிறார்கள். ஆழ்ந்த இரங்கல் என்று அனைவரும் கமெண்ட் செய்வதால் இப்போது யூடியூப் சேனல்களில் அண்ணாமலையின் பாதயாத்திரையைக் காட்டுவதே இல்லை. இதனால்தான் அவரை இப்போது டெல்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நன்றாக மிரட்டி அனுப்புவார்கள்.
அவருடைய கட்சி நிர்வாகிகளே கோபம் கொள்ளும் அளவுக்கு தான் இந்த பாதயாத்திரை நடந்து வருகிறது. ஹெச்.ராஜாவை அவருடைய வீட்டிலேயே யாரும் மதிக்க மாட்டார்கள். வேறு எந்த மூத்த தலைவரும் அண்ணாமலையுடன் செல்லவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதற்காகத்தான் அண்ணாமலையின் நடைபயணத்துக்கு விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பணம் கொடுக்கின்றனர். அரவக்குறிச்சியில் ஒரு பூத்தில் வெறும் 4 ஓட்டுகள் வாங்கிய அண்ணாமலை, முதலமைச்சர் பொறுப்புக்கு ஆசைப்படுகிறார்.
இங்கு மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அண்ணாமலை யாத்திரையைத் தொடங்கினார். பாஜகவுக்கான அரசியலைத் தான் சீமான் செய்கிறார். அதனால்தான் சிறுபான்மையினரை சாத்தானின் பிள்ளைகள் என்று கூறினார். மணிப்பூரில் பாஜக தான் ஆட்சி செய்கிறது. அங்கு நடந்த கலவரங்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? சமீபத்தில் குஷ்பூவும், வானதி சீனிவாசனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரேம்ப் வாக் செல்கிறார்கள். இருவருமே மகளிர் அணி மற்றும் மகளிர் ஆணைய பொறுப்பில் இருப்பவர்கள். இவர்கள் ஏன் மணிப்பூர் செல்லவில்லை? பணம் கொடுத்து செட்டப் செய்து அண்ணாமலையின் யாத்திரைக்கு ஆட்களை இவர்கள் கூட்டி வருகிறார்கள். அண்ணாமலை குறித்து பெருமையாகப் பேசச் சொல்கிறார்கள். அதில் இவர்கள் நடத்தும் அனைத்துமே நாடகங்கள் தான்.