Skip to main content

"பொள்ளாச்சியிலிருந்து ஒருவர் வந்தார், வந்தவுடனேயே..." -மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய குமரவேல் 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

மக்கள் நீதி மய்யம் தேர்தலுக்கான வேலை, விருப்பமனு, நேர்காணல், இறுதிப் பட்டியல் என மும்முரமாக இருக்கும் வேளையில் நேற்று மாலை கடலூர் மற்றும் நாகப்பட்டினம் பொறுப்பாளர் குமரவேல் கட்சியிலிருந்து விலகினார். அதைத்தொடர்ந்து நக்கீரனுக்கு அவர் அளித்த பேட்டி. 

 

kumaravel


கட்சியில் இணையும்போது என்ன எதிர்பார்த்து இணைந்தீர்கள்?

தமிழ்நாடு இரண்டு கட்சிகளிடம் மாட்டி முழித்துக்கொண்டிருந்தது. ஒரு வெற்றிடம் இருந்தது. தமிழ்நாடு புது அரசியலுக்கும், இளைஞர்கள் மாற்று அரசியலுக்கும் விரும்பினோம். 1980களில் யாராவது லஞ்சம் வாங்கினவர்கள் என்று தெரிந்தாலே, அவர்கள் தலை குனிந்து செல்வார்கள். 2019ல் யாராவது லஞ்சம் வாங்கவில்லையென்றால் அவர்களை வீட்டில் சேர்க்க மாட்டார்கள். இந்த மாதிரியான நிலைக்கு நாம் ஆளாகிவிட்டோம். நமக்கே தெரியாமல் நாம் அனைவரும் கரெப்ட் ஆகிவிட்டோம். இதில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. அது மாறவேண்டுமென்றால் மாற்று அரசியல் வேண்டும். யார் அந்தப் பூனைக்கு மணி கட்டுவார்கள் என்று பார்க்கும்போதுதான் கமல் சார் வரேன்னு சொன்னாரு. இத்தனை நாட்களாக நடிகராக பார்த்தவர், சமூக அடையாளமாக வந்தது, அவரின் பேட்டிகள், கட்டுரைகள் இதையெல்லாம் பார்த்தது, ஜெயலலிதா இருக்கும்போது எல்லாரும் பயந்துகொண்டிருந்தபோது சமூக ஊடகத்திலும், மற்றவையிலும் பேசினார். இவையெல்லாம் பிடித்திருந்தது. அவர் வரும்போது, அவர் தலைமையிலான மாற்று அரசியல் வரும் என எதிர்பார்த்து சேர்ந்தேன்.

 

கட்சிக்குள் புதியவர்கள் வந்தவுடன் கட்சியின் பாதை மாறிவிட்டது எனக் கூறியிருந்தீர்கள், யார் வந்தவுடன் அதை நீங்கள் உணர்ந்தீர்கள்..
 

டாக்டர் மகேந்திரன் பொள்ளாச்சியிலிருந்து வந்தார். வந்த முதல் நாளிலேயே துணைத் தலைவர் ஆகிவிட்டார், எனக்கு தெரிந்து அவர் இன்னும் இந்திய துணைத்தலைவர்தான் ஆகவில்லை. எனக்கு தெரிந்து யாரும் இப்படி ஆனதில்லை, இப்படியொரு கட்சியில். அதற்குமுன் பத்து மாதமாக படிப்படியாக கட்சியை வளர்த்து, ஒரே நாளில் இவர் வந்து இழுத்துக்கொண்டு சென்றால் எப்படி இருக்கும். அதேபோல்தான் கோவை சரளாவும், எட்டு நாளைக்கு முன்வந்து, நேர்காணலில் உட்காந்திருக்கிறார்.

 

அதற்கு என்ன காரணம்...
 

அவர் புதுமை விரும்பியாய் இருப்பார். புது ஆள், புது ஐடியா அது சில இடங்களில் அது நல்லதாகக்கூட இருக்கும். புது ஐடியா தேடும்போது அது நல்லதாக இருக்கும், புது ஆள் தேடும்போது, பழைய ஆட்களையும் சேர்த்து அழைத்துக்கொண்டு போகவேண்டும். அது முடியவில்லையென்றால் இதுபோல் நடக்கும்.
 

ஒரு வருடம், இரண்டு மாதம் கட்சியில் இருக்கும் என்னிடம் கமல் சார் நம்பர்கூட இல்லை என கூறியிருந்தீர்கள். யார் தடுக்கிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்.
 

மரியாதை என்பது கேட்டு பெறுவதில்லை, அவர்களாகவே கொடுக்க வேண்டும். அவருக்கே தெரியும் பாதி பேரிடம்தான் இருக்கிறது, பாதி பேரிடம் இல்லையென்று. அவருக்கு வேண்டும் என்பவர்களுக்கெல்லாம் கொடுக்கிறார். எங்களை ஒரு நாள் கூட ஃபோனில் தொடர்பு கொண்டதில்லை.

 

kumaravel

கட்சியில் இணையும்போது என்ன சொன்னார், இப்போது வெளியில் செல்கிறேன் என்றபோது என்ன சொன்னார்.
 

கட்சியைவிட்டு வெளியேறுகிறேன் எனக் கூறியபோது அவர் கூப்பிட்டுக்கூட பேசவில்லை. பொதுச்செயலாளர்தான் பேசினார். நீங்கள் போகக்கூடாது, நீங்கள் நல்லவர் என்றார்கள். நான் கட்சியை விட்டு செல்ல எனக்கு ஒரு சரியான காரணம் உள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கோ, கமல்ஹாசனுக்கோ நான் விசுவாசி கிடையாது, அவருடைய நேர்மை, அவருடைய குறிக்கோளுக்குதான் நான் விசுவாசி. அந்த குறிக்கோளே சென்றடையாதபோது, அதைவிட்டு வேறு பாதைக்கு செல்லும்போது, நான் அதைவிட்டு விலக வேண்டிய கட்டாயம் வருகிறது.
 

கட்சியில் சேரும்போது, அப்போது கட்சியும் புதிது, கட்சியில் சேருபவர்களும் புதிது, அவரும் புதிது. கட்சியில் யார் வந்தாலும் சேர்த்துக்கொண்டார்கள், அவர்களை நன்றாகதான் நடத்தினார்கள். கட்சி குறித்து எல்லோரும் இணைந்து பேசுவோம். எங்கள் யாருக்கும் அரசியல் பின்புலம் கிடையாது. அதனால் அவர்களுக்கு புரிந்தவகையில் நடந்தோம். அதற்குபின் மாறிவிட்டது.

 

நேர்காணலுக்கு சென்றேன் எனக்கூறியிருந்தீர்கள், அங்கு உங்களுக்கு அந்நியமாக பட்டது எது.
 

கோவை சரளா இருந்தது மட்டும்தான் அந்நியமாக இருந்தது. வேறு இருவரும் உட்கார்ந்திருந்தார்கள், அவர்கள் இருவரும் வல்லுநர்கள், மதன் சாரும், ராவ் சாரும் உட்கார்ந்திருந்தது ரொம்ப நல்லதாகவே தெரிந்தது. இவுங்க உட்கார்ந்திருந்ததுதான் ‘என்னடா இவுங்க இங்கே’ என்று இருந்தது.

 

சினிமாவிலும், அரசியலிலும் ஒரே நேரத்தில் பயணிக்கிறார் என்று கூறியிருந்தீர்கள். அது எந்த விதத்தில் குறையாக இருந்தது.
 

முக்கியமான நேரத்தில் அரசியலா, சூட்டிங்கா என வரும்போது அவர் சூட்டிங்கைத்தானே கவனிப்பார். அது பிக்பாஸாக இருக்கலாம், விஸ்வரூபமாக இருக்கலாம். இந்தியன் படம் இப்போது தள்ளிப்போய்விட்டது. இல்லையென்றால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாரா அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாரா எனத் தெரியவில்லை.

 

கட்சிதான் எனக்கு முக்கியம் எனக் கூறுகிறாரே கமல்.
 

கண்டிப்பாக அவர் கட்சிக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது போதாது. மக்கள் நீதி மய்யம் ஒரு சின்னக் குழந்தை அதை பதினெட்டு மணிநேரம் பார்த்துக்கொள்ளக்கூடாது, 24 மணிநேரமும் பார்த்துக்கொள்ள வேண்டும். நடந்து, ஓட ஆரம்பித்தவுடன் அதன்பின் ஆறு மணிநேரம் மட்டும் கூட பார்த்துக்கொள்ளலாம்.

 

 

 

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.