Skip to main content

மிரட்டும் ஆளுநர்; போராடும் மாநில அரசு

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

kerala governor Arif Mohammad Khan warns ministers

 

"என்னை விமர்சித்தால் அமைச்சர்கள் பதவி பறிக்கப்படும்" என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கேரள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமதுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இது தொடர்பாக சட்டத் திருத்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியும் அது நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக கேரளாவில் அரசியல்வாதிகளும், அரசியல் விமர்சகர்களும் ஆளுநர் மீது  அதிருப்தியை  வெளிப்படுத்தி வருகின்றனர். 

 

kerala governor Arif Mohammad Khan warns ministers

 

இந்நிலையில் ஆளுநர், "அமைச்சர்கள் கருத்து தெரிவித்தால் பதவி பறிக்கப்படும்" என தெரிவித்திருப்பது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசுக்கு ஆளுநர் மூலம் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

 

புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டதாக அப்போது பெரும் குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதேபோல் மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான அரசுக்கும் அப்போதைய ஆளுநர் ஜெகதீஷ் தான்கருக்கும் இடையே மோதல் போக்கே நிகழ்ந்தது.  தமிழகத்திலும் முன்னாள் அதிமுக ஆட்சியில் பன்வாரிலால் புரோகித் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதாக விமர்சனங்கள் எழுந்தது. தற்போது புதுச்சேரி நியமன துணைநிலை ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜனும், தமிழக ஆளுநரான ஆர்.என் ரவியும் அவ்வப்போது சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை தெரிவிப்பதும் அதற்கு விமர்சங்கள் எழுவதும் நடந்து வருகிறது. 

 

அமைச்சர்கள் பதவி பறிக்கப்படும் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது தெரிவித்ததன் பின்னணி 

 

kerala governor Arif Mohammad Khan warns ministers

 

கேரள சட்டசபையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா ஒன்றை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில், யாராக இருந்தாலும் அரசியல் சாசன கடமையை சரியாக செய்ய வேண்டும் என கேரள உயர்கல்வி அமைச்சர் பிந்து தெரிவித்திருந்தார். 

 

துணைவேந்தர் விவகாரம் கேரளாவில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் முழு உரிமை உண்டு. ஆனால்  ஆளுநர் பதவியின் கன்னியத்தை கெடுக்கும் வகையில் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தால் பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார். 

 

இதற்கு கேரள உயர்கல்வி அமைச்சர் பிந்து, ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் செயல்படுகிறார் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல் அரசியல் சாசன சட்டப்படி ஆளுநருக்கு இது போன்ற அதிகாரங்கள் இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சி.பி.எம் கட்சியின் கேரள மாநில செயலாளர் எம்.வி கோவிந்தன், ஆளுநரின் இந்தக் கருத்து சட்டமன்ற ஜனநாயகம் குறித்தும், சட்டம் குறித்தும் அவரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், "அமைச்சர்களை நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை" என்று தெரிவித்துள்ளார். 

 

இது கேரளா மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விவாதப் பொருளாக மாறியுள்ளது.