Skip to main content

இரண்டு, ஐநூறு, ஒரு லட்சம்... எத்தனை பேரை கைது செய்வீர்கள்? - ஈபிஎஸ்க்கு ஜோதிமணி கேள்வி

Published on 21/06/2018 | Edited on 21/06/2018
jothimani


சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய, மாநில அரசுகளோ அதனை உடனடியாக நிறைவேற்ற பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. விவசாயிகள் எதிர்க்கும்போது அவசர அவசரமாக இந்த திட்டத்தை நிறைவேற்றுவது ஏன் என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி:-
 

முதலில் இந்தத் திட்டத்திற்கான அடிப்படை தேவை என்ன? யாருக்கு லாபம்? சென்னையில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் அதிவிரைவாக சென்று என்ன சாதிக்கப்போகிறார்கள்? நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளிடம் கருத்து கேட்கப்படவே இல்லை. எண்பது சதவீத விவசாயிகள் ஆதரவு இருந்தால்தான் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஆனால் இந்த 8 வழிச் சாலை திட்டத்திற்கு முழுக்க முழுக்க அனைத்து விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 
 

இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஒருவரை கைது செய்வீர்கள், இரண்டு பேரை கைது செய்வீர்கள், 500 பேரை கைது செய்வீர்கள், ஒரு லட்சம் பேர் திரண்டு போராடினால் ஒரு லட்சம் பேரையும் கைது செய்வீர்களா? மக்கள் நல அரசு என்கிறார் முதல் அமைச்சர். மக்களிடம் நேரடியாக போய் பேசினாரா இந்த முதல் அமைச்சர். இந்த திட்டத்தால் என்னென்ன பயன் என்று மக்களிடம் நேரடியாக சென்று பட்டிலிட்டு காட்ட தயாரா. துப்பாக்கிச் சூடு நடந்த தூத்துக்குடிக்கே போகாதவர் இந்த முதல் அமைச்சர். 

 

 

 

மக்களுக்காக போராடியவர்களை சமூக விரோதிகள் என்கிறார்கள். ஒட்டுமொத்த மக்களும் எதிர்க்கும்போது அதற்கு எதிராக இருப்பவர்கள்தான் சமூக விரோதிகள். எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் நிறுவ கடந்த 4 வருடமாக யோசித்தது மத்திய அரசு. 8 வழிச்சாலைக்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் எதிர்க்கும்போது உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பது ஏன்?. 
 

உத்திரப்பிரசேத்தில் இதேபோன்று நிலங்களை கையகப்படுத்தும்போது ராகுல்காந்தி விவசாயிகளுடன், பொதுமக்களுடன் சென்று போராடினார். தமிழ்நாட்டில் விவசாயிகளுக்காக, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக காங்கிரஸ் கட்சி அவர்களுடன் களத்தில் இறங்கி போராடும். 
 

பாஜகவினர் சொல்கிறார்கள் தேசத்திற்காக தனிமனிர்கள் தியாகத்தை செய்ய வேண்டும் என்று. இந்த தேசப்பற்றாளர்களை ஒன்று கேட்கிறேன். இந்த தியாகத்தை எப்போதும் விவசாயிகளே செய்ய வேண்டுமா? ஒரு மாறுதலுக்கு நீங்களே செய்து பாருங்களேன். உங்கள் வீட்டை, உங்கள் நிலத்தை ஒரு பள்ளிக்கூடத்திற்கோ, மருத்துவமனைக்கோ எழுதி வையுங்களேன். 
 

பெருமுதலாளிகளுக்குச் சாதகமாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாறுதல் கொண்டுவர மோடி அரசு முயற்சி செய்தது. இதுதொடர்பாக மூன்று முறை அவசரசட்டம் பிறப்பிக்கப்பட்டது. ராகுல் காந்தி விவசாயிகளைத் திரட்டிப் போராடியதோடு காங்கிரஸ் கட்சி அனைத்து எதிர்கட்சியினரையும் ஓரணியில் திரட்டி இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுத்தது. அப்போதே அதிமுக அரசு இம்மக்கள் விரோத சட்டத்தை ஆதரித்தது. 

 

 

 

தற்போது காங்கிரஸ் அரசு கொண்டுவந்த பழைய சட்டமே அமலில் இருக்கிறது. இச்சட்டம் விவசாயிகள் நிலம் விவசாயிகளுக்கே சொந்தம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. ஒரு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வேண்டுமென்றால் முதலில் திட்டத்தின் சாதக பாதக அம்சங்கள் தொடர்பாக சமூகத்தணிக்கை செய்யவேண்டும். அதை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும். எண்பது சதவீத விவசாயிகளின் சம்மதத்தை கட்டாயம் பெறவேண்டும்.


இதையெல்லாம செய்யாமல் சட்டத்தை காற்றில் பறக்கவிட்டு விட்டு காவல்துறையின் உதவியோடு மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது. மக்கள் களத்தில் மட்டுமல்ல நீதிமன்றத்திலும் போராட முடியும் அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும். இவ்வாறு கூறினார்.

 

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.