Skip to main content

அசத்தப்போவது ஹைதராபாத் காவல்துறை! - திரும்பிப் பார்க்குமா சென்னை காவல்துறை?  

Published on 05/05/2018 | Edited on 05/05/2018

இப்பொழுதெல்லாம் நாம் நமது அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டியுள்ளது. உங்கள் ஓட்டுனர் உரிமம் தொலைந்தால் கூட உங்களுக்கான காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வெள்ளை காகிதத்தில் மனு எழுதி கொடுத்து, மனு ஏற்பு சான்றிதழை முதலில் பெற்று இரண்டு நாட்கள் கழித்து காவல்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை என மீண்டும் ஒரு சான்றிதழ் பெற வேண்டும். அதற்குப் பிறகே உங்களால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் விதிமுறைகளின்படி ஓட்டுனர் உரிமம் மீண்டும் பெற முடியும். இதை நீங்கள் நேர்மையாகக் கடக்க வேண்டும் என்று நினைத்தால் மனு ஏற்பு சான்றிதழைக் கூடப் பெற முடியாது. ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ, கசப்பான உண்மையாக இதுதான் இருக்கிறது. 
 

rto bribe

 

 


ரயில்,பேருந்து பயணங்களின் போது முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகள்,புது வேலைக்கான நேர்முகத் தேர்விற்கு நமது வரலாற்றை நிரூபிக்க மதிப்பெண் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், தொழில் உடன்பாட்டின் அடையாளமாக பரிமாறப்படும் தகவல்கள் என இன்னும் எத்தனையோ ஆவணங்கள், வேலைக்கு விண்ணப்பிக்க, மேற்படிப்புக்கு என பல்வேறு காரணங்களுக்காக நம் வீட்டருகே உள்ள கணினி மையத்தில் அல்லது ஜெராக்ஸ் கடையில் நம்மால் முன்பு அச்சிடப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில், வங்கித் தேர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் முழுக்க கணினிமயமாக்கப்பட்டுவிட்டதால் சான்றிதழ்கள் டிஜிட்டலாக பகிரப்பட்டு காகிதப் பயன்பாடு வெகுவாகக்  குறைக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி,பொது மக்களுக்கும் பண,நேர விரயம் தவிர்க்கப்படுள்ளது. பாஸ்போர்ட் அலுவலகங்களும் மாறிவிட்டன. முன்பு போல் ஏஜென்ட்டுகள் தேவையில்லை. நாமே எளிதாக விண்ணப்பித்து, மனஉளைச்சல் இல்லாமல் (சான்றிதழ்கள் சரியாக இருக்கும் பட்சத்தில்) பெற முடிகிறது. இப்படியிருக்க, தமிழக காவல் நிலையங்களோ இன்றும் புகார் கொடுக்க செல்பவர்களை ஒரு குயர் பேப்பர் வாங்கிட்டு வா என்கிறது. வலைதளம் இருந்தும் கணினிமயமாக்கப்பட்டும், அதை மக்களைப் பயன்படுத்த ஊக்குவிக்காமல் மந்தமாகவே இருக்கிறது இங்கு நிலைமை. யார் லாபத்திற்காக? பாதிக்கப்பட்டவர்கள் கணினி மூலம் தங்கள் அடையாளத்தை உறுதி செய்து குறைகளைப் பதிவு செய்தால் லஞ்சம் குறைந்து, குறைகள் குவியும் என்பதற்காகவா? 

 

anjani kumar

அஞ்சனி குமார்



தமிழகத்தில் நிலைமை இப்படியிருக்க, இந்த மே 1 முதல் இந்தியாவுக்கே முன்னோடியாக ஹைதராபாத்தில் 100 சதவிகிதம் காகிதப் பயன்பாடு அகற்றப்பட்டு முற்றிலும் கணினிமயமாகிவுள்ளது. காவல்துறைக்கான ஃபேஸ்புக் பக்கத்திலேயே பொதுமக்கள் புகார்களை அளிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நேரில் சென்று புகார் அளிப்பவர்களின் விவரங்களை கணினியில் பதிய காவலர்களுக்கு கணினி மற்றும் இணைய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. "இதன் மூலம் ஏறத்தாழ ஆண்டொன்றிற்க்கு ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். தற்போது இருப்பதை விட  நடவடிக்கைகளை விரைவாகவும், எளிமையாகவும் செயல்படுத்த முடியும்" என்று இந்தத் திட்டத்தை செயல்படுத்திய ஹைதராபாத் காவல்துறை ஆணையர் அஞ்சனி குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

 


ஹைதராபாத் காவல்துறை அங்கு அசத்தக் காத்திருக்க, சென்னை காவல்துறை குட்கா சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. எதற்கும் அசையாத தமிழக காவல்துறை அமைச்சரான நம் முதல்வரின் பேருக்கு இங்கு திரையரங்குகளில் அர்ச்சனை நடக்கிறது.        

 

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.