Skip to main content

அரியலூர் மாவட்டத்தில் முதல் கரோனா பலி... கடவுள் மீது பழி போட்டுத் தப்பிக்க அரசு முயற்சிக்கக் கூடாது! - எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கை!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

S. S. Sivasankar

 

அரியலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் கரோனா பரவலே இல்லை, மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற மாயையை அரசு ஏற்படுத்தி வந்தது. அந்த மாயை இன்று உடைந்து போனது. அரியலூரில் கரோனாவுக்கு முதல் உயிர் பலியாகி விட்டது.

 

கரோனா தொற்றால் அரியலூர் மாவட்டத்தில் முதலாவதாக இறந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளவர், அரியலூர் கடைவீதியில் மங்காப் பிள்ளையார் கோவில் அருகே பூக்கடை வைத்திருந்தவர்.

 

இவர் கடந்த ஒரு வாரம் முன்பு வரை தனது கடையில் அமர்ந்து பூ வியாபாரம் செய்தவர். எந்த வெளியூருக்கும் சென்றவர் கிடையாது. வெளியூருக்குச் செல்லாமல், கடையிலேயே இருந்தவருக்கு கரோனா எப்படித் தாக்கியது என்பது தான் கேள்வி.

 

இந்தக் கேள்விக்கான விடை, கடந்த பத்து நாட்களில் அரியலூர் நகரில் தொற்று பரவிய விபரத்தின் மூலமாகத் தெரிய வருகிறது.

 

அரியலூர் நகரில் மாதா கோவில் அருகே கடை வைத்திருக்கும் ஒரு நபருக்கு, பத்து நாட்களுக்கு முன்பாக கரோனா தொற்று ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அடுத்து, அரியலூர் நகரில் தஞ்சாவூர் சாலையில் ஒருவருக்குக் கரோனா தொற்று என அறிவிக்கப்பட்டது.

 

அடுத்து சடையப்படையாட்சித் தெருவில், இருவருக்குத் தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்போது தொற்று அறியப்பட்ட பூக்கடைக்காரர் இறந்து போய்விட்டார்.

 

இவர்கள் அத்தனை பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதவர்கள். வெவ்வேறு தெருவைச் சேர்ந்தவர்கள். இப்படித் தொடர்பில்லாமல் பரவுவதைத் தான் வல்லுநர்கள் "சமூகப் பரவல்" என்கிறார்கள். 

 

சமூகப் பரவலால் தான், பூக்கடைக்காரர் இறந்து போயுள்ளார்.

 

நகரத்தில், இவர்களுக்கிடையே தொற்றைக் கொண்டு சேர்த்தவர்கள் யார் என்று கண்டறியப்படவில்லை. இவர்கள் மூலம் வேறு யாருக்கு பரவி இருக்கும் என பரிசோதனை செய்யப்படவில்லை. டிரேஸிங் என்பது அறவே இல்லை. 

 

இது குறித்து நகராட்சி அதிகாரிகளை நாளிதழ்களில் பணியாற்றும் சில சமூக ஆர்வம் கொண்ட நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர்கள், "பாதிக்கப்பட்ட இடத்தை 'சீல்' செய்வதும், கிருமிநாசினி தெளிப்பதுமே எங்கள் பணி, சுகாதாரத்துறையிடம் கேட்டுக் கொள்ளுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்கள்.

 

சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "எங்கள் பணி பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, மருந்து கொடுப்பது மாத்திரம் தான். நீங்கள் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கேளுங்கள்", என்று கூறியுள்ளனர்.

 

வருவாய்த்துறை அதிகாரிகளைக் கேட்டதற்கு," எங்கள் பணி உணவு அளிப்பது, முகாமை நிர்வகிப்பது தான்", என்று கூறியுள்ளனர்.

 

"இப்படி மூன்று துறையும் ஒருங்கிணைப்பில்லாமல் செயல்படுகிறார்கள்", என்று தங்கள் கவலையைப் பத்திரிகைத் துறை நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

இவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய, கண்காணிக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரிடம் அதிகாரம் இல்லை.

 

கரோனா நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, சுகாதாரத் துறை துணை இயக்குநர் தான் முழு அதிகாரத்தையும் தன் கையில் வைத்துள்ளார். இவர், சுகாதாரத் துறை அமைச்சரின் மாவட்டமான புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். இவரது அண்ணன், அமைச்சர் விஜயபாஸ்கரின் உற்ற நண்பர். அந்த அதிகாரத்தைக் காட்டுகிறார். அதிகாரம் செய்யட்டும், பரவாயில்லை. அதன் மூலம் கரோனா கட்டுப்படுத்தப்பட்டால் மகிழ்ச்சி. ஆனால் கரோனா பரவி,  பாதிக்கப்படுவது மக்கள் என்பது தான் கவலைக்குரிய விஷயம்.

 

கடந்த மே மாதம், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் தொழிலாளர்கள் அரியலூர் மாவட்டத்திற்கு வந்த போது, ஒரே நாளில் 188 பேருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. அன்றோடு பரிசோதனை நிறுத்தப்பட்டது. பிறகு, பல புகார்கள் அய்.சி.எம்.ஆருக்கு சென்று பரிசோதனையை மீண்டும் துவங்கினார்கள். ஆனால், ரிசல்ட் வெளிப்படையாக அறிவிக்கப்படுவது என்பது இல்லை.

 

இதுவரை 3,000 பரிசோதனைகள் எடுக்கப்பட்டதாக தகவல் வருகிறது. அதில், ஒருவருக்கே எத்தனை முறை எடுக்கப்பட்டது, எத்தனை நபர்களுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் இல்லை. கடந்த ஒரு மாதமாக எடுக்கப்படும் பரிசோதனைகள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு மாத்திரமே எடுக்கப்பட்டுள்ளது.

 

அரியலூர் மாவட்டத்தில் இருந்து வெளியில் செல்லாதவர்கள், தாமாக முன் வந்து டெஸ்ட் எடுக்கச் சென்றாலும், பரிசோதிக்கப்படுவதில்லை. அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரமே டெஸ்ட் எடுக்கப்படுகிறது.

 

அப்படித் தான், இன்று பலியானவரும் ஒரு வாரமாக சளி, காய்ச்சல் என பாதிக்கப்பட்டு, தானாக அரியலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவருக்கு நீரிழிவு நோயும், ரத்த அழுத்தமும் உள்ளதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு மூன்று நாட்கள் முன் பரிசோதிக்கப்பட்டு, இன்று தான் முடிவுகள் வந்தன. முடிவு வரும் முன்பே அவர் இறந்து விட்டார்.

 

இவர் தானாக மருத்துவமனைக்குச் சென்றிருக்காவிட்டால், அவருக்கு பரிசோதனை நடந்திருக்காது. அறிகுறி இல்லாமல், கரோனா தொற்றி இருப்பது அவருக்கே தெரிந்திருக்காது. அவர் மூலம் பலருக்கும் பரவ வாய்ப்பாக ஆகியிருக்கும். இப்போதும் அவருக்கு யார் மூலம் பரவியது என்பது தெரியாது. எத்தனை பேருக்கு பரவி இருக்கும் என்பது தெரியவில்லை.

 

 இது தான் சமூக பரவல். 

 

ஆனால், " சமூகப்பரவல் இல்லை", என மூச்சைக் கட்டிக் கொண்டு முழங்குகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதற்கு, மருத்துவம் படித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ஒத்து ஊதுவது தான் கேவலம். 

 

சமூகப்பரவல் என அரசு அறிவித்து விட்டால் கூட, மக்கள் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டுத் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வார்கள்.

 

"கரோனா தொற்று எப்போது ஒழியும் என ஆண்டவனுக்குத் தான் தெரியும்", என சொன்னது போல, "என் அரசால் உங்களைக் காக்க முடியாது", என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்து விட்டால், மக்கள் தற்காப்பு நடவடிக்கையில் இறங்குகிறார்கள்.

 

இந்த முதல் கரோனா பலிக்கு பிறகாவது, அரியலூர் மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் மக்களைப் பாதுகாக்க முடியும்.

 

http://onelink.to/nknapp

 

அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகள் அதிகம். ஆலைப் புகையால், ஏற்கனவே பலர் ஆஸ்துமா தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். வரும் மழைக்காலத்தில் அவர்களுக்கு மூச்சுப் பிரச்சினை அதிகமாக இருக்கும். அவர்களை கரோனா தாக்கினால், நிலைமை விபரீதமாகி விடும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை.

 

நான் மே மாதத் துவக்கத்தில் விட்ட அறிக்கைக்கு பின் விழித்திருந்தால், நிலைமை மோசமாகி இருக்காது. இனி நிலைமை இன்னும் மோசமாகாமல் தடுக்க வேண்டும்.

 

தி.மு.கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது அறிக்கையை அலட்சியப்படுத்தி, தமிழக அரசு தடுமாறுவது அனைவரும் அறிந்தது. கேரள மாநிலத்தில் கட்டுப்படுத்தப்பட்டது போல், தமிழகத்திலும் கட்டுப்படுத்தி இருக்கலாம்.

 

கடவுள் மீது பழியைப் போட்டு, கையாலாகத் தனத்தை மறைத்துத் தப்பிக்க முயலாமல், அரசு தன் கடமையைச் செய்ய முன்வர வேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.