Skip to main content

“செத்தாலும் வாழ்ந்துட்டான்யா!” -மரணத்திலும் பெருமிதம்!

Published on 13/03/2018 | Edited on 13/03/2018


 

arun


 

“சாகப் போறோம்னு தெரிஞ்சுதான்.. எல்லாத்தயும் அனுபவிச்சிடனும்னு துடியா துடிச்சியா? வீடு தங்காம சுத்துனியா? மலை ஏறணும்.. மலை ஏறணும்னு காடு மேடெல்லாம் அலைஞ்சியே.. காட்டுத் தீயே உன் உசிர காவு வாங்கிருச்சே..” 
 

-விருதுநகர் மாவட்டம் – வத்திராயிருப்பை அடுத்துள்ள மகாராஜபுரம் கிராமத்துக்கு, குரங்கணி விபத்தில் தீக்கிரையான அருண் பிரபாகரின் உடல் வந்து சேர்ந்தபோது, சொந்தபந்தங்கள் கதறினார்கள்.
 

சென்னையில் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றும் மனைவி சுரேகா, கணவனை சடலமாகப் பார்த்து  மயங்கிச் சரிய, 8 வயது மகன் பிரணவ்வோ, சோகத்தை வெளிப்படுத்த தெரியாமல் அங்குமிங்கும் நடந்தபடி இருந்தான். 
 

“செத்தாலும் வாழ்ந்துட்டான்யா..” என்று பெருமிதப்பட்டார் அருண் பிரபாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அந்தக் கிராமத்துப் பெரியவர். 
 

arun



அருண் பிரபாகர் கொண்டாடிய வாழ்க்கை இதுதான் –
 

படித்தோம்; பணியாற்றினோம்; குடும்பத்துக்காக வாழ்ந்தோம் என்ற சராசரி மனிதனாக இருக்க விரும்பவில்லை அருண் பிரபாகர். பரந்து விரிந்த உலகத்தில், சிறகு விரித்துப் பறக்கும் பறவையைப் போல வாழ வேண்டும் என்ற ஆசைப்பட்டார். அதுபோன்ற ஒரு வாழ்க்கைக்கு, அவருக்கு வழி காட்டியது சென்னை ட்ரெக்கிங் கிளப் என்ற பெயரில் இயங்கிய மலையேற்ற பயிற்சி அமைப்பு. காடு, மேடெல்லாம் ஏறி இறங்குவதில் அருண் காட்டிய தீவிரம், அவரை அந்த அமைப்பின் சிறந்த ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது. அவரது மலையேற்றத்தின் எண்ணிக்கை 2014-லிலேயே 100-ஐ கடந்துவிட்டது. மலையேற்றம் மட்டுமல்ல, ஆழ்கடலில் நீந்துவது, மோட்டார் பைக்கில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வது என, எதையும் அவர் விட்டுவைக்கவில்லை.  லே, ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து பைக்கில் தொடங்கிய விரைவுப் பயணத்தை,  94 மணி நேரம் 25 நிமிடங்களில்  கன்னியாகுமரியை அடைந்து நிறைவு செய்தார்.  லிம்காவின் தேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றார். 

 

arun

 

arun


 

arun


 

arun

 

arun

 

arun


 

arun

 

arun

 

arun



அருண் பிரபாகரைப் போலவே திவ்யாவும், நிஷாவும் சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். மகளிர் தினத்தை வலிமையுடன் கொண்டாடுவோம் என்று அறிவித்து,   மார்ச் 10 – 11 தேதிகளில், தமிழ்நாடு – கேரள எல்லையான கொழுக்குமலையில் 2 நாட்கள் மலையேற்றத்துக்கு   ஏற்பாடு செய்தது இவ்விருவர்தான். தற்போது நிஷா 99 சதவீத தீக்காயத்துடனும், திவ்யா 90 சதவீத தீக்காயத்துடனும் உயிருக்குப் போராடினர். இதில் திவ்யா தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  
 

சிஸ்கோ சிஸ்டத்தின் ப்ராஜக்ட் மேனேஜரான, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வெய்ன் கெய்ட்,  சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் நிறுவனர் ஆவார். 40000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கிளப்,  லாப நோக்கமற்ற தன்னார்வ குழு என்று தன்னைப் பிரகடனப்படுத்தி உள்ளது. சென்னையில் வெள்ளம் வந்தபோது 130 பேர் உயிரைக் காப்பாற்றினார் பீட்டர் என்றெல்லாம் அப்போது செய்தியில் அடிபட்டார். குரங்கணி தீ விபத்தில் சிக்கி, மலையேறிய `10 பேர் இப்போது உயிரிழந்துவிட்ட நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அலுவலகத்தைப் பூட்டிவிட்டு, தலைமறைவாகிவிட்டார் பீட்டர்.    நீலாங்கரை போலீஸார் அவரைத் தேடி வருகிறார்கள்.

 
‘மலையேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் முறையான பயிற்சி பெற்றவர்கள் அல்ல; உரிய அனுமதி பெறாமல், மலைப்பகுதிகளுக்கு இளைஞர்களை அழைத்துச் சென்றார்கள்’ என, சென்னை ட்ரெக்கிங் கிளப் குறித்தும், அதன் நிறுவனர் பீட்டர் மீதும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பினாலும், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் ‘இவன் எங்களில் ஒருவன்! எங்கோ பிறந்த இவன், எங்களுக்கு இயற்கை மீதிருந்த காதலை அதிகமாக்கினான். மனிதர்களை இயற்கையோடு இணைந்து வாழச்செய்வதே இவன் நோக்கம். வசதி தேடி, வாழத் தெரியாமல் இருந்த மனங்களில், வழியில் கிடைப்பதெல்லாம் வரமென்று புரியவைத்தான். காட்டுத் தீ விபத்தின் உண்மை நிலையை மறைப்பதற்கு இவனைப் பலிகடா ஆக்கிவிட்டார்கள்.’ என்று பீட்டருக்காக உருகுகின்றனர். 
 

கை நிறைய சம்பாதித்தாலும், பெருநகர வாழ்க்கை என்பது பலருக்கும் இயந்திரத்தனமாகவே அமைந்துவிடுகிறது. இயற்கையை ரசிப்பதன் மூலம் அதிலிருந்து அவர்களால் விடுபட முடிந்தது. வார இறுதியிலோ, மாதக் கடைசியிலோ, புத்துணர்ச்சி பெற்று, பணிக்குத் திரும்புவதற்கான நல்லவழியாக,  மலையேற்றத்தை தேர்வு செய்தார்கள்.  அதற்கும் இப்போது சோதனை வந்துவிட்டது. 

 

Next Story

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சி விசாரணை டிச. 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
yu


கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டுள்ளார்.


சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23) கடந்த 23.6.2015ம் தேதி மாயமானார். அதற்கு அடுத்த நாள் (24.6.2015) மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 


சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட கும்பல்தான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருப்பதாக தகவல்கள் பரவின. இந்த வழக்கு தொடர்பாக யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருண், சங்கர், சந்திரசேகர் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். 

 

o


இந்த வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜோதிமணி, அமுதரசு ஆகிய இருவர் தவிர யுவராஜ் உள்பட 15 பேரும் இந்த வழக்கின் சாட்சி விசாரணையின்போது ஆஜராகி வருகின்றனர். 


கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சேலம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியும், வழக்கறிஞருமான பார்த்திபன், அரசுத்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த நவம்பர் 22ம் தேதியன்று நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். பின்னர் நேரம் இல்லாததால் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையை பிறிதொரு நாளில் வைத்துக்கொள்வதாக தெரிவித்தனர். 

 

ar


அதையடுத்து மீண்டும் சாட்சி விசாரணை திங்கள்கிழமை (டிசம்பர் 3, 2018) தொடங்கியது. கோவை மத்திய சிறையில் இருந்து கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான அருணை எஸ்கார்ட் அழைத்து வர தாமதம் ஆனதால், சாட்சி விசாரணை பகல் 12.40 மணிக்குதான் தொடங்கியது. அருண், நாமக்கல் நீதிமன்றத்துக்கு பகல் 12.25 மணிக்கு அழைத்து வரப்பட்டார்.


யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ, பார்த்திபனிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். 

பார்த்திபன்

p


பார்த்திபனின் சொந்த ஊர், எந்தக் கல்லூரியில் சட்டம் பயின்றார், கோகுல்ராஜை எப்படி தெரியும் என்பது உள்ளிட்ட அடிப்படை தகவல்களில் இருந்து குவிமுச பிரிவு 161 வாக்குமூலத்தில் அவர் தெரிவித்த விவரங்களின் அடிப்படையில் வழக்கறிஞர் ஜி.கே. குறுக்கு விசாரணை நடத்தினார். 


மாலை 3.30 மணிக்கு குறுக்கு விசாரணை முடிந்தது. வேறு எந்த சாட்சிகளும் ஆஜர்படுத்தப்படவில்லை. இதையடுத்து அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணை வரும் 12.12.2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார். 


கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜ் மீது நீதிமன்றத்தை அவமதித்த வழக்கும் ஜேஎம்-1வது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.