Skip to main content

சாலையோரம் கிடக்கும் விவசாயக் கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகள்! 

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

Natural fertilizer


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கரும்பு, நெல், சோளம், கம்பு, காய்கறிகள் மற்றும் பூ வகைகள் என பல்வேறு விதமாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.  
 


இந்நிலையில் தற்போது விருத்தாசலம் பகுதியில் எள் சாகுபடி அறுவடை தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது. அதனால் அறுவடை செய்த எள் செடியில் இருந்து, எள்ளைப் பிரித்தெடுப்பதற்காக, விவசாயிகள் வெப்பம் அதிகமாகக் கிடைக்கக் கூடிய களம் மற்றும் நெடுஞ்சாலைகளில் உலர்த்துகின்றனர். அவ்வாறு விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை பிரித்தெடுப்பதற்காக உலர்த்த முக்கிய இடங்களாக விருத்தாச்சலம்- கடலூர் மற்றும் சிதம்பரம் புறவழிச்சாலைகளைப் பயன்படுத்துகின்றனர். தங்களுக்குத் தேவையான விவசாயப் பொருட்களை மட்டும் எடுத்துவிட்டு  மீதமுள்ள விவசாயக் கழிவுகளைச் சாலையோரம் டன் கணக்கில் குவித்து வைத்துள்ளனர்.  

இதனால் சாலை ஓரங்களில் கிடக்கும் விவசாயக் கழிவுகளை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்துவதால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான மரங்கள் கருகி நாசமாகிறது.  

அதேசமயம் இந்தக் கழிவுகளை நல்ல இயற்கை உரங்களாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர் விவசாயிகள். அவர்கள்  விவசாய சாகுபடிக்குப் பின் கிடைக்கும் விவசாயக் கழிவுகளை ஆர்கானிக் முறையில் பதப்படுத்தி நல்ல உரமாக மாற்ற இயலும் என்ற நம்பிக்கையில் சாலையோரம் கிடக்கும் அனைத்துக் கழிவுகளையும் வாகனத்தின் மூலம் எடுத்துச் சென்று பதப்படுத்தி நல்ல இயற்கை உரமாக மாற்றுகின்றனர். 

தற்போதுள்ள காலகட்டத்தில் விவசாயிகள் ரசாயன பொருட்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் போது அவர்களுக்குச் செலவுகள் அதிகமாகிறது. மேலும் விளைநிலங்களின் இயற்கை தன்மையும் குறைகிறது. இவற்றைப் போக்க இயற்கையான பொருட்களைப் பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரங்களுக்கு விவசாயிகள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது. 
 

 


ஒரு கிலோ மண்புழு உரம் எட்டு ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளையக்கூடிய பொருள்களில் கிடைக்கக்கூடிய கழிவுகளைப் பயன்படுத்தி சிறப்பான முறையில் மண்புழு உரம் தயாரிக்க முடியும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் அனைவரும் தங்கள் நிலத்தில் விளையக்கூடிய விவசாயப் பொருட்களை உரங்களாக மாற்றவேண்டும் என்றும் , பொதுச் சொத்துக்களுக்கும், மற்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கும், சாலையோரங்களில் விவசாயிகள் கழிவுகளை ஒதுக்கித் தள்ளுவதைத் தவிர்த்துவிட்டு, அக்கழிவுகளைச் சிறப்பான முறையில் உரமாக மாற்றும் முயற்சியில் அனைத்து விவசாயிகளும் ஈடுபடவேண்டும் என்று இயற்கை விவசாயிகள் கூறுகின்றனர். 
 

http://onelink.to/nknapp


மேலும் தமிழக அரசு சாலையோரம் உள்ள விவசாயக் கழிவுகளை அகற்றுவதைத் தவிர்த்துவிட்டு,  இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கழிவுகளைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான உதவிகளையும், அவற்றைப் பதப்படுத்தி, இயற்கை உரங்கள் உற்பத்தி செய்ய நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் இயற்கை விவசாயம் மென்மேலும் வளரும் என்றும், அதன்மூலம் நஞ்சில்லா உணவுப் பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்கும் என்கின்றனர்.  

 

 

 

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.