Skip to main content

விஜய்க்கு டஃப் கொடுக்கும் விஜய் சேதுபதி! மாஸ்டர் - விமர்சனம்

Published on 13/01/2021 | Edited on 13/01/2021
master vijay

 

கரோனா ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட பத்து மாத இடைவெளிக்கு பிறகு 'மாஸ்டர்' பட ரிலீஸ் மூலம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது தமிழ் திரையுலகம். எனினும் தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் வெளிவந்துள்ள 'மாஸ்டர்' அனைவராலும் ரசிக்கப்பட்டாரா?

 

குடி போதைக்கு அடிமையான கல்லூரி பேராசிரியராக வரும் விஜய் மாணவர்களுக்கு மிகவும் பிடித்தவராகவும் அதே சமயம் அதிகாரிகளால் வெறுக்கப்படுபவராகவும் இருக்கிறார். இதனால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக அனுப்பப்படுகிறார். அங்கு இருக்கும் மாணவர்களை சீரழித்து தன் தொழில் ஆதாயத்திற்காக விஜய் சேதுபதி பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை விஜய், விஜய் சேதுபதியிடம் இருந்து காப்பாற்ற முற்படுகிறார். இதனால் விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் யார் ஜெயித்தார்கள், விஜய் சேதுபதியின் இந்த செயலுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதே மாஸ்டர் படத்தின் மையக் கதை.

 

விஜய் இதில் மிகவும் ஸ்டைலிஷாக வருகிறார். அவரின் 'ஸ்வேக்' படம் முழுவதும் பரவசப்படுத்துகிறது. மற்ற படங்களை காட்டிலும் இதில் அவர் இயல்பான மனிதராகவே பல காட்சிகளில் தென்படுகிறார். அது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. இருந்தும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட இடங்களில் அவர் தன் மாஸ் இமேஜில் இருந்து வெளியே வந்து அண்டர் பிளே செய்யும் காட்சிகள் முழு திருப்தியாக இல்லை.

 

master vijay sethupathi

 

நாயகனின் கதையை காட்டிலும் படத்தின் வில்லனாக வரும் விஜய் சேதுபதியின் கதை அழுத்தம் நிறைந்ததாக அமைந்துள்ளது. அதுவே படத்தின் அரணாக இருந்து காத்திருக்கிறது. அந்த வாய்ப்பை மிக சிறப்பாகப் பயன்படுத்தி விஜய்க்கு டஃப் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. கூடவே எப்போதும்போல் விஜய் சேதுபதியின் குறும்பு கலந்த வில்லத்தனமும் விஜய் ரசிகர்களையும் கூட கவர்வது போல உள்ளது. குறிப்பாக விஜய்யும் விஜய் சேதுபதியும் சந்தித்துக்கொள்ளும் காட்சி 'பக்கா மாஸ்' என்று சொல்லத்தக்கது.

 

விஜய்க்கு என பிரத்தியேக பில்டப் காட்சிகள், கேமராவை பார்த்து பேசும் பன்ச் வசனங்கள்,சர்ச்சையை கிளப்பும் அரசியல் விமர்சனங்கள் என டெம்பிளேட் விஷயங்களை தவிர்த்து மாஸ்டர் படத்தை  உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இருந்தும் ரசிகர்களை கவரும் வகையில் கதையோடு சேர்ந்த சில கூஸ்பம்ப் மொமெண்ட்டுகளை அமைத்து தியேட்டரை அதிரவைத்துள்ளார். குறிப்பாக கபடி ஆடும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி அதற்கு சான்றாக அமைந்துள்ளது. படத்தின் முக்கிய பிரச்னையாக இருப்பது நீளம். கதைக்குள் செல்லவே நெடுநேரம் எடுத்துக்கொள்கிறது படம். முதல் பாதி நீளத்தை காட்டிலும் இரண்டாம் பாதி நீளம் இன்னும் அதிகமாக இருப்பது அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் திரைக்கதையின் வேகமும் ஒரே சீராக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பது படத்தின் சுவாரஸ்யத்தை சற்று குறைத்துள்ளது.

 

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் பெரும் பிம்பத்திற்கு நடுவே மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், மாஸ்டர் மகேந்திரன், பூவையார், சாந்தனு, '96' கௌரி கிஷன், 'விஜய் டிவி' ரம்யா, தீனா ஆகியோர் ஆங்காங்கே பளிச்சிட்டுள்ளனர். அவரவர் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் நெடுக பல சின்னச் சின்ன சுவாரசியமான ஐடியாக்களை பயன்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். ஆனால், ஒரு முழுமையான படமாக ரசிக்க வைப்பதில் 'ஏதோ குறையுதே' என்ற உணர்வை ஏற்பட விட்டுவிட்டார். தரமான, தீவிரமான படங்கள் எடுக்கக்கூடிய இயக்குனர் மிகப்பெரிய நாயகனை கையாளும்போது ஏற்படக்கூடிய நேர்மறை விளைவுகளும் இந்தப் படத்தில் இருக்கின்றன, எதிர்மறை விளைவுகளும் இருக்கின்றன. 

 

malavika mohanan

 

மாஸ்டர் படத்தின் மற்றுமொரு பலமாக அமைந்துள்ளது சத்யன் சூர்யன் ஒளிப்பதிவும், அனிருத்தின் அதிரடி இசையும். கல்லூரி சம்பத்தப்பட்ட காட்சிகளை கலர்ஃபுல்லாகவும், சீர்திருத்தப் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகளை 'ரா'வாகவும் காட்டி ரசிக்க வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன். அனிருத்தின் வாத்தி கம்மிங் மற்றும் வாத்தி ரெய்டு பாடல்கள் குத்தாட்டம் போட வைத்துள்ளது. குறிப்பாக பின்னணி இசையில் எப்போதும்போல் மாஸ் காட்டியுள்ளார். பல காட்சிகள், இசையால் சிறப்பாகின்றன.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்களை தியேட்டர்களுக்கு பாதுகாப்புக்கு நெறிமுறைகளோடு படையெடுக்க வைக்கும் விதமாக வெளிவந்துள்ள மாஸ்டர் படம் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதாக அமைந்துள்ளது.

 

ஆனாலும், மாஸ்டர் - கண்டிப்பும், கலகலப்பும் கொஞ்சம் குறைவு!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தொடர்ந்து படம் பண்ணுங்க” - கோரிக்கைக்கு ஓகே சொன்ன விஜய்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பை பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக மாற்றியது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆராவரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ் ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். 

இந்த நிலையில் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விஜய்க்கு மாலை அணிவித்த சக்திவேலன், அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். “அரசியலுக்கும், மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால் வருஷத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க. வியாபாரத்தை தாண்டி ரசிகர்களின் கொண்டாட்டம் தியேட்டரில் கூஸ்பம்ஸ் தருணமாக இருக்கிறது. அதனால் தொடர்ந்து படம் பண்ணுங்க” என்றார். இதனிடையே அவருக்கு பதிலளித்த விஜய், சரி என சொல்லிவிட்டு அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தற்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைப் படத்தை தவிர்த்து இன்னொரு படத்தில் நடித்து விட்டு பின்பு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘முடிச்சிடலாம்...’ - வெளியான ‘ரஜினி 171’ பட அப்டேட்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
thalaivar 171 titled as coolie

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், தங்கம் கடத்தும் குடோனுக்குள், ரஜினி செல்கிறார். அங்கு அந்தக் கும்பலை அடித்துபோடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் ரஜினி, வசனம் பேசிக்கொண்டே அக்கும்பலை தாக்குகிறார். “அப்பாவும் தாத்தாவும், வந்தார்கள் போனார்கள். தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே,... சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்கத்தில் இடமுண்டு” என்று அவர் ஏற்கெனவே அவர் படத்தில் பேசும் வசனம் இடம்பெறுகிறது.

மேலும் இறுதியில் ‘முடிச்சிடலாம் மா...’ ரஜினி சிரித்து கொண்டே பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தங்க கடத்தலை வைத்து உருவாகுவது போல் தெரியும் சூழலில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.