Skip to main content

4 ஆண்டுகள் வெயிட்டிங்... செல்வா ஃபேன்ஸ் ஹேப்பியா? எப்படி இருக்கிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’?

Published on 05/03/2021 | Edited on 05/03/2021
s.j.surya

 

கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என அறிவிப்பு வெளியான நாள்தொட்டே ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ‘புதுப்பேட்டை’க்குப் பிறகு யுவனுடன் செல்வராகவன் இணையும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதலான எதிர்பார்ப்பு இருந்தது (இடையில் NGK எடுக்கப்பட்டு வெளியானது). இந்நிலையில், பல சிக்கல்களுக்குப் பிறகு இப்படம் செல்வராகவன் பிறந்தநாளான இன்று வெளியாகியிருக்கிறது. எப்படி இருக்கிறது படம்? ‘என்.ஜி.கே’ தோல்விக்குப் பிறகு தன்னை நிலைநிறுத்தியிருக்கிறாரா செல்வராகவன்?

 

ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு ஜானர்களில் முயற்சி செய்யும் செல்வராகவன், இம்முறை பேய்க்கதை சொல்ல முயன்றிருக்கிறார். வழக்கமான பயமுறுத்தல்கள், ‘திடீர் திடீர்னு உடையுதாம், சாயுதாம்’ மொமண்ட்கள், நீளமான ஃப்ளாஷ்பேக்குகள் இல்லாத பேய்படம் என்பது ஆறுதல். மற்றபடி செல்வராகவன் க்ளிஷேக்கள் நிறைந்த படம் என்பதால் செல்வா ரசிகர்கள் உற்சாகமாகவே ரசிக்கலாம். மிக எளிமையான கதை, அதை தன் திரைக்கதையால் சற்றே சுவாரசியப்படுத்தி இருக்கிறார் செல்வராகவன்.

 

regina

 

தொழிலதிபரான எஸ்.ஜே.சூர்யா தன் மனைவி, குழந்தையுடன் தனியாக வசித்துவருகிறார். குழந்தையை கவனித்துக்கொள்ளும் வேலைக்காக, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ரெஜினா அந்த வீட்டிற்கு வருகிறார். உலகில் உள்ள தீயவர்களின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினாவை அடைய முயல்கிறார். அதற்கு அவர் இணங்காததால், அவரை வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொல்கிறார். ஆவியான ரெஜினா எஸ்.ஜே.சூர்யாவைப் பழிவாங்குகிறார். அவ்வளவுதான் கதை. அரதப்பழசான கதையை தன்னுடைய பாணியில் சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.

 

ஒரு வீடு, மூன்று முக்கியக் கதாபாத்திரங்கள், ஆறு உப கதாபாத்திரங்கள்... இதற்குள்ளாகவே தன்னுடைய விளையாட்டை விளையாடியிருக்கிறார் இயக்குநர். படம் முழுக்க எஸ்.ஜே.சூர்யா ராஜ்ஜியம்தான். கத்துக்குட்டி இங்கிலீஷ் பேசுவது, மனைவி, மாமனாரிடம் குழைவது, ரெஜினாவிடம் உருகுவது, இரட்டை முகம் காட்டுவது என ஒரு உடலுக்குள் பல உருவங்களை வெளிபடுத்துகிறார். நந்திதா, ரெஜினா உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கான பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். செல்வராகவன் சின்னச்சின்ன கதாபாத்திரத்தின் நடிப்புத் திறனுக்கும் இடம்கொடுப்பார், ஆனால் பெரும்பாலும் அனைத்து கதாபாத்திரங்களிலும் செல்வவராகவனே பிரதிபலிக்கப்படுவார். இதிலும் அப்படியே.

 

nandita

 

கடவுள் x மனிதன் அல்லது நன்மை x தீமை இரண்டுக்குமான உளவியலைச் சொல்ல முயன்ற இயக்குநர், அதை முழுமையாகச் சொன்னாரா என்றால் கேள்விக்குறிதான். ஆனால் பணக்காரன், ஏழை என எந்த வர்க்கமானாலும் தீமை தன்னை நிலைநிறுத்த கடைசிவரை போராடும், யாரைப் பற்றியும் கவலைப்படாது என்ற உளவியலை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பேய்க்கதையின் வழக்கமான ஃபார்மட்டில் படம் இல்லையென்றாலும், ஒரு தொடர்ச்சி இல்லாமல், தனித்தனியாக எடுத்த காட்சிகளை ஒட்ட வைத்து பார்ப்பதைப் போன்ற உணரை்வை தவிர்க்க முடியவில்லை.

 

ad

 

செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி, பின்னணி இசையில் தங்கள் பலத்தை காட்டியிருக்கிறது. ஒரு முழு ஆல்பமாக, தங்கள் முந்தைய படங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் பாடல்கள் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. நன்மை x தீமை, கடவுள் x மனிதன் என்ற உளவியல் முரண்களை ஒளிகளை வைத்தே பார்வையாளர்களுக்குக் கடத்துகிறார் ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா.

 

வர்க்க, இன வேறுபாடுகளைக் கடந்தும் மனித மனத்தின் மூர்க்கத்தனத்தை சொல்ல முயன்ற செல்வராகவன், அதற்கான வலுவான கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்காததால், பேய்படமாகவும் இல்லாமல், செல்வராகவன் படமாகவும் இல்லாமல் கொஞ்சம் தள்ளாடுகிறது 'நெஞ்சம் மறப்பதில்லை'. 

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“செல்வராகவனை இயக்குவேன் என நினைத்ததில்லை” - தனுஷ்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
selvaraghavan look from dhanush 50 raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இப்படத்தில் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் இப்படம் தனுஷின் கனவு படம் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு அவரது கதாபாத்திர லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்தது. இந்த நிலையில் தற்போது செல்வராகவன் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. புது லுக்கில் செல்வராகவன் இடம்பெற்றிருக்கிறார். இதுவரையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் பல படங்கள் நடித்த நிலையில் இப்படத்தில் செல்வராகவனை தனுஷ் இயக்கியுள்ளார். செல்வராகவனை இயக்குவது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்களை ஒரு நாள் இயக்குவேன் என்று நினைத்ததில்லை சார்” என குறிப்பிட்டுள்ளார்.