Skip to main content

அதர்வாவின் அக்கா நயன்தாரா???  இமைக்கா நொடிகள் - விமர்சனம் 

Published on 02/09/2018 | Edited on 05/09/2018

சைக்கோ சீரியல் கொலைகாரர்கள் அடிப்படையில் எக்கச்சக்க ஹாலிவுட் படங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் அது அவ்வளவாகப் போகாத இருட்டான பாதைதான். அந்த வழி போனவர்களும் ஏற்கனவே போனவர்கள் பின்னாடியேதான் போயிருக்கிறார்கள். 'இமைக்கா நொடிகள்' ஒரு சைக்கோ கொலைகாரரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட த்ரில்லர் திரைப்படம். புது வழியா, அதே வழியா பார்ப்போம்.

 

nayanthara vijay sethupathi



பெங்களூரில் தொடர் கொலைகள் நடக்கின்றன. சில காலத்துக்கு முன்பு தாங்கள் கொலை செய்துவிட்டதாக நம்பும் சீரியல் கில்லரின் பாணியிலேயே இந்தக் கொலைகளும் நிகழ்வதால் குழப்பமடைகிறது காவல்துறை. கொலைகளைத் துப்பறிய சிபிஐ அதிகாரி நயன்தாரா, அவரது டாக்டர் தம்பியாக அதர்வா, வில்லனாக ஹிந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், கொஞ்ச நேரமே வரும் விஜய் சேதுபதி இவர்களுடன் இரண்டு, மூன்று ஃப்ளாஷ்பேக்குகள் இரண்டு மூன்று ட்விஸ்ட்டுகள் கொண்ட, இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது த்ரில்லர் முயற்சி 'இமைக்கா நொடிகள்'. 

 

adharva raashi



நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கப்படுவதற்கு முழு தகுதியடைந்துவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு, சிபிஐ அதிகாரியாக ஸ்டைலாக அழகாக வலம் வருகிறார். அவரது தம்பியாக அதர்வா. கதாபாத்திரத்தின் அளவிலும் நடிப்பிலுமேன எல்லாவற்றிலும் தம்பியாகத்தான் இருக்கிறார். அதர்வாவின் நடிப்புத் திறமைக்கு முழு தீனி போடவில்லை இந்தப் படம். சில காட்சிகளில் தன்னை நிரூபிக்கிறார். வில்லன் அனுராக் காஷ்யப் ஒரு சூப்பர் சர்ப்ரைஸ், அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் குரலும் சிறப்பு. என்றாலும் இரண்டும் சில காட்சிகளில் அந்நியமாகத் தெரிவது போன்ற உணர்வு. சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் உற்சாகமளிக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால், அவர் வரும்பொழுது படம் முக்கால் காலத்தைத்தாண்டி நாம் சற்றே அயர்ச்சியில் இருக்கிறோம். அதர்வாவின் காதலியாக ராஷி கண்ணா, அழகான வரவு. தெலுங்கில் அதற்குள் டாப்பிற்கு சென்று விட்டாராம்.

 

anurag



பரபரப்பாகத் தொடங்கும் படம், இடையிடையே வரும் ஃப்ளாஷ்பேக்குகளால் தொய்வடைந்து இறுதியில் ஒரு நல்ல ட்விஸ்ட்டுடன் நிறைவடைகிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் முதல் படமான 'டிமான்டி காலனி', சிறிய பட்ஜெட், செட்-அப்பில் ஒரு சிறந்த த்ரில்லர் படம் எடுக்க முடியுமென்பதற்கு உதாரணம். கதையை விட்டு சற்றும் விலகாத படம் அது. எந்த ஒரு காட்சியையும் தேவையில்லாதது என்று கூற முடியாது. ஆனால், 'இமைக்கா நொடிக'ளில் அப்படிப்பட்ட காட்சிகள் சற்று அதிகம். அதர்வாவின் காதல் தேவைதான், ஆனால் அது இவ்வளவு நீளம் தேவையா? அதுபோலத்தான் இன்னும் சில காட்சிகளும். அவை தவிர்க்கப்பட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். காவல்துறை- சிபிஐயின் எல்லை அவ்வளவு, ஒரு தனி மனிதனால் ஒரு மாநகரத்தில் எவ்வளவு விஷயங்களை கட்டுப்படுத்த முடியும் போன்ற கேள்விகளையெல்லாம் நாம் மறந்துவிட்டுத்தான் பார்க்கவேண்டும். குரு முருகதாஸின் தாக்கம் ஆங்காங்கே தெரிகிறது. பிரம்மாண்டத்தில் இருந்த கவனம், உணர்வுகள் ரசிகர்களை சென்றடைய வேண்டுமென்பதில் இல்லையோ என்று எண்ணவைக்கின்றன த்ரில்லர் காட்சிகள்.

 

 


ஹிப் ஹாப் தமிழா இசையில் இரண்டு பாடல்கள் சிறப்பு, பின்னணி இசையும் தேவையான பதற்றத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறது. ஒரு இடைவெளிக்குப் பிறகு ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு, படத்தின் தரத்தை உயர்த்தி நாம் பார்க்காத நிறத்தில் பெங்களூரைக் காட்டுகிறது. புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பு காட்சிகளை சரியாகக் கோர்த்திருக்கிறது. ஆனால், எடிட்டிங்கில் தவறா, இயக்குனரின் எழுத்தில் தவறா என்று எண்ணவைக்கிறது படத்தின் நீளம்.

இமைக்கா நொடிகள், ரன்னிங் அதிகம், த்ரில்லிங் சற்றே குறைவு!            
  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.