
விமல் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான ‘காவல்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நாகேந்திரன். இப்படம் போதிய வரவேற்பை பெறாததால் மற்ற சினிமா பணிகளை நாகேந்திரன் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாகேந்திரன் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அவ்ர் தெரிவித்திருப்பதாவது, “அன்பு நண்பன் நாகேந்திரன் மறைவுச் செய்தி கேட்டது மிகத் துயரமான நாளைத் துவக்கி வைத்திருக்கிறது.
நாட்களும், நொடிகளும் மிகக் கொடுமையானவை. பூவை உதிர்த்துப்போடுவது போல நமக்கு நெருக்கமானவர்களை பிரித்துக் கொண்டுபோய்விடுகிறது. நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வெகு வேதனையானது. காலம் யாருக்கு என்ன செய்யக் காத்திருக்கோ என்ற பயத்தை ஏற்படுத்திச் செல்கிறது. சகோதரனாய்.. நெருங்கிய நண்பனாய் பபணித்தவரை சட்டென்று இழந்துபோனதில் நெஞ்சம் கலங்குகிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும். இவ்வதிர்ச்சியைத் தாங்கும் பலத்தையும் இறைவன் தரட்டும். நாகேந்திரன் மறைவுக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இயற்கையின் மடியில் இளைப்பாறட்டும்” என்றுள்ளார்.