Skip to main content

“நான் இனி எப்போதும் தைரியமாக கெத்தாக இருப்பேன்” - நடிகை த்ரிஷா

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

trisha talk about ponniyin selvan

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததுள்ளது.

 

இந்நிலையில் நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது குறித்தும், தனது கதாபாத்திரம் குறித்தும் நிறைய விஷங்களை பகிர்ந்துள்ளார். அதில், "நாங்கள் அனைவரும் நடிகர்கள். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைந்து விட்டால் நாங்கள் அனைவரும் கதாபாத்திரமாக மாறி விடுவோம். ஆதலால் இரண்டு படங்களில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து விட்டு, இப்படத்தின் சகோதரியாகவும் நடிக்க முடிந்தது. பொன்னியின் செல்வன் வரலாற்று மற்றும் கமர்ஷியல் இரண்டும் இணைந்த படம். எனவே, எனது நடை, உடை, பாவனை, தோற்றம், குரல், பார்வை என அனைத்தையும் மொத்தமாக மாற்ற வேண்டியிருந்தது.

 

குந்தவையின் தோற்றத்திற்காக 6 மாதங்களாக வீட்டு பாடம் செய்து பல பார்வைகளை பரிசோதித்து பார்த்தோம். கிட்டத்தட்ட 100 க்கும் மேக்கப் உடைகள் நகைகள் அணிந்து, அதில் வெவ்வேறு விதமான தோற்றங்கள் மற்றும் பார்வைகளை வரிசையாக பரிசோதித்தோம். குந்தவைக்கு இதுதான் சரியான பார்வை என்று தேர்ந்தெடுக்கும் வரை ஒவ்வொன்றாக வடிகட்டி கொண்டே வந்தோம். இறுதியில் ஒரு தோற்றத்தை பல்வேறு காட்சிகளுக்கு பயன்படுத்தினோம். முக்கியமாக தலையில் பன் கொண்டையும் பலவகைகளில் சோதித்து பார்த்து தேர்ந்தெடுத்தோம். குந்தவை என்ற அடையாளத்தைக் கொண்டு வந்ததற்காக என்னுடைய ஒப்பனையாளர் ஏகா லகானிக்கு மிக்க நன்றி. இதெல்லாம் குந்தவை கதாபாத்திரத்திற்காக நான் எதிர்கொண்ட சவால்கள்.

 

மேலும், இப்படத்தில் உடைகள் முழுவதும் அணிவது போல இருக்கும், நகைகள் நிறைய இருக்கும், நடிக்கும் போது பெரிதாக தெரியாது. ஆனால், ஓய்வு எடுக்கும் போது பெரும் சவாலாக இருந்தது. தலையில் பன் கொண்டை, நகைகளின் அதிக எடையால் காது வலிக்கும். தண்ணீர் குடிக்க முடியாது. அதுமட்டுமல்ல, இப்படத்தில் ஆண்களும் பெண்களுக்கு இணையாக ஒப்பனை செய்ய அதிக நேரம் ஆனது. காலை 7 மணி படபிடிப்பிற்காக அனைவரும் அதிகாலை 2.30 மணிக்கே ஒப்பனை செய்ய ஆரம்பித்து விடுவோம் என்றார்.

 

மணி சார் வசனங்கள் முழுக்க முழுக்க செந்தமிழில் கொடுக்கவில்லை. சில இடங்களில் செந்தமிழ் இருந்தது. சில இடங்களில் வசனங்கள் பேசுவதற்கு சிரமமாக இருந்தது. வசனங்களை பேசிக்கொண்டே உணர்வுகளையும் கொண்டு வர முடியவில்லை. ஆகையால், உணர்வுகளுக்கு ஏற்ப வசனங்களை மாற்றிக் கொண்டோம். ஆனால், முதலில் வசனங்களை படித்ததும் வாயில் நுழையவில்லை. நிறைய ஒத்திகை செய்தேன். வசனங்களை சரியாக உச்சரிப்பதற்கு மணி சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். அதனால் வசனங்கள் பேசுவது எளிமையானதாக இருந்தது.

 

ஐஸ்வர்யா ராயின் நட்பு இப்படம் மூலம் கிடைத்தது. குந்தவைக்கும், நந்தினிக்குமான மோதல் காட்சிகள் நிறைய இருக்கிறது. முதல் நாள் படப்பிடிப்பிலேயே நானும் ஐசும் சேர்ந்த காட்சிகளை எடுத்தார்கள். அப்போதே நாங்கள் நன்றாக பேச ஆரம்பித்து விட்டோம். ஆனால், மணி சார் நீங்கள் இருவரும் இந்த அளவிற்கு நட்பாக இருக்க கூடாது. காட்சிகள் சரியாக வராது என்று கூறினார்.

 

அதன்படி, நாங்கள் அடுத்த மூன்று நாட்கள் நடந்து கொண்டோம். ஆனால், நாங்கள் நடித்த காட்சி சிறப்பாக வந்திருந்தது என்று அனைவரும் ஆச்சரியத்தில் பாராட்டினார்கள். மணி சார் கூறியதை நாங்கள் செய்தோம் அவ்வளவுதான்.  ஜானு கதாபாத்திரம் போல குந்தவை கதாபாத்திரமும் உங்களின் அடையாளமாகுமான்னு கேட்கிறார்கள். இப்படத்திலும் எனக்கு ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறது. ஆனால், ஒரு கதாபாத்திரம் அடையாளச் சின்னம் ஆகுமா என்பதை படம் வெளியாகி அனைவரும் கூறும் போது தான் தெரியும்.

 

ஊரடங்கு சமயத்தில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தாமல் அனைவரும் அவரவர் வீட்டிலேயே தான் இருந்தோம். ஆனால், மணி சார் எல்லோரும் எடை அதிகரித்து விடுவார்களோ என்று பயந்து கொண்டே இருந்தார். அவ்வபோது, தொடர்புகொண்டு திரிஷா, நீங்கள் குண்டாகவில்லை என்று நம்புகிறேன். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கூறி கொண்டிருப்பார். என் வாழ்க்கையில் பொக்கிஷமாக கிடைத்த இந்த குந்தவையிடம் நான் கற்றுக் கொண்டது. குந்தவை எப்போதும் தைரியமாக கெத்தாக இருப்பார். நானும் இனி அதையே பின்பற்றுவேன்” என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்