Skip to main content

'அவர்கள் திரும்ப வருவார்கள்' - காத்திருக்கும் டி.இமான்

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

‘They will come back’ -  D.Imman

 

2002-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் டி.இமான். தொடர்ந்து ரஜினி, அஜித், விஜய், சூர்யா விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்தில் இசையமைத்ததற்காக தேசிய விருது பெற்றார். இதனிடையே இசையமைப்பாளர் டி.இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு தனது மனைவியை இமான் சட்ட ரீதியாக விவாகரத்து செய்தார். டி.இமான், அமலி என்பவரை சமீபத்தில் மறுமணம் செய்துகொண்டார். இந்த திருமண நிகழ்வில் இமானின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர்.  

 

இந்நிலையில் டி. இமான் தனது மறுமணம் குறித்து ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "கடந்த மே 15 ஞாயிற்றுக்கிழமை, மறைந்த பிரபல ஓவியரும் டிசைனருமான உபால்டு மற்றும் சந்திரா உபால்டு தம்பதியரின் மகள் அமலி உபால்டை மறுமணம் செய்தேன். என் வாழ்வின் கடினமான தருணங்களில், மிகப்பெரிய பலமாக இருந்த என் தந்தை ஜே.கிருபாகர தாஸுக்கு, எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கடந்த சில வருடங்களாக நானும் என் குடும்பத்தினரும் எதிர்கொண்ட சவால்களுக்கு, குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணம் ஒரு தீர்வாக இருக்கும். அமலியை எனக்கு அறிமுகப்படுத்திய என் குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

அமலியின் மகள் நேத்ரா இதன் பிறகு எனக்கு மூன்றாவது மகள், நேத்ராவின் தந்தையாக இருப்பது அளவில்லா மகிழ்ச்சியை தருகிறது. எங்கள் திருமண நாளில் என் அன்பு மகள்களான வெரோனிகா மற்றும் ப்ளெசிக்காவை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். ஆனாலும், அவர்கள் என்றாவது ஒருநாள் வீட்டிற்கு வருவார்கள் என்று பொறுமையாகக் காத்திருக்கிறோம். அப்படி அவர்கள் வரும்போது நானும், அமலி, நேத்ரா மற்றும் உறவினர்கள் அனைவரும் அவர்களை அளவு கடந்த அன்போடு வரவேற்போம். அமலியின் மிகப்பெரிய குடும்பத்தினர் என் மீது காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன். இத்தருணத்தில், எனக்கு ஆதரவாக இருக்கும் எனது இசை ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்