Skip to main content

“மற்ற மொழி படங்களை ரிலீஸ் செய்துக்கொள்கிறோம்” -திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு! 

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

tripur

 

 

கோலிவுட்டில் சினிமா தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வியாபார ரீதியாக நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கமும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தாக வேண்டும் என்று மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து நேற்று மீண்டும் சுற்றறிக்கை ஒன்றை பாரதிராஜா வெளியிட்டுள்ளார்.

 

அதில், “தமிழ்த்‌ திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ தொடங்‌கியவுடன்‌, இனிமேலும்‌ வி.பி.எஃப் என்ற கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள்‌ சங்கத்தை சேர்ந்த அனைவருக்கும்‌, அனைத்து டிஜிட்டல்‌ புரொஜக்‌ஷன் (QUBE/UFO/PRASAD) நிறுவனங்களுக்கும்‌ முறையாகக் கடிதம்‌ அனுப்பினோம்.

 

அதில்‌ 12 வருடங்களுக்கு மேலாகக் கட்டி வரும்‌ VPF என்கிற வாராவாரம்‌ கட்டணத்தை இனிமேல்‌ கொடுக்க முடியாது. டிஜிட்டல்‌ நிறுவனங்கள்‌ மாஸ்டரிங்‌, குளோனிங்‌, டெலிவரி மற்றும்‌ சேவைக்கான ஒரு முறை (ONE TIME PAYMENT) கட்டணம்‌ எதுவோ அதை மட்டுமே இனிமேல்‌ எங்களால்‌ தர முடியும்‌ என்று தெரிவித்து இருந்தோம்‌.

 

திரையரங்கில்‌ உள்ள புரொஜக்டர்‌ சம்பந்தப்பட்ட லீஸ்‌ தொகையை திரையரங்குகள்‌தான்‌ கட்ட வேண்டும்‌, தயாரிப்பாளர்கள்‌ அல்ல என்பதையும்‌ தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்‌.

 

அத்தகைய ஒரு முறை கட்டண முறைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால்‌, திரையரங்குகள்‌ மீண்டும்‌ திறக்கப்பட அனுமதி வந்தாலும்‌, எங்களின்‌ புதிய திரைப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்‌ என்பதையும்‌ குறிப்பிட்டிருந்தோம்‌.

 

100 பேருக்கும்‌ மேல்‌ நடப்பு தயாரிப்பாளர்கள்‌ இந்த முடிவை எடுத்துத் தெரிவித்த போதிலும்‌, திரையரங்கு உரிமையாளர்களும்‌, டிஜிட்டல்‌ புரொஜக்‌ஷன்‌ நிறுவனங்களும்‌ (QUBE/UFO), எங்களின்‌ கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல்‌, நாங்கள்‌ தொடர்ந்து வி.பி.எஃப் கட்டணத்தை வாங்குவோம்‌ என்று தெரிவித்துள்ளனர்‌.

 

தயாரிப்பாளர்கள்‌ அனைவரும்‌ ஒருங்கிணைந்து வெளியிட்டிருந்த 5 கோரிக்கைகளில்‌ ஒன்றைக் கூட அவர்கள்‌ ஏற்றுக்‌கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளதால்‌, நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தயாரிப்பாளர்களும்‌ ஒருங்கிணைந்து, வி.பி.எஃப் கட்டணத்திற்கு ஒரு முடிவு வரும்‌ வரை தங்களின்‌ புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

எனவே, இந்த வி.பி.எஃப் கட்டணப்‌ பிரச்சனைக்கு முடிவு எட்டும்‌ வரை, அனைத்துத் தயாரிப்பாளர்களும்‌, தங்களின்‌ புதிய படங்களின்‌ வெளியீட்டுத் தேதியை தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்தோசித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “இந்நேரத்தில் பேசப்பட வேண்டிய பிரச்சனை இல்லை இது. எங்கள் தரப்பிலும் நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தாலும் தொழில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளை மட்டும் நிரப்பி திரையரங்குகளை திறக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து புதிய கோரிக்கைகளை முன்வைக்கும்போது அதனை எங்களால் ஏற்க முடியாது. தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்தால் மேலும் 2 மாதங்களுக்கு திரையரங்குகளை மூடிவைப்பது எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றார். 

 

தற்போது வீடியோ கான்ஃப்ரென்ஸ் மூலம் நடைபெற்ற திரையரங்கு உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில், பாரதிராஜாவின் கோரிக்கையை ஏற்க முடியாது. அப்படி கட்டணத்தை கட்ட மாட்டோம் என்று சொன்னால், மற்ற மொழி படங்களை ரிலீஸ் செய்துக்கொள்கிறோம் என்று முடிவு செய்துள்ளனர். மேலும், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில திரையரங்கு அதிபர்களுடன் இணைந்து தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் என்ற ஒன்றை நிறுவ இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்