Skip to main content

“பாசிட்டிவிட்டியால் நிரம்பியுள்ளது; ஸ்பெஷலானது” - சூர்யா

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
suriya about kanguva

சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 10 மொழிகளுக்கு மேலாக 3டி முறையில் சரித்திரப் படமாக வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து தாய்லாந்தில் நடந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விபத்து குறித்து விளக்கமளித்த சூர்யா, உடல் நலம் தேறி வருவதாகவும், உங்கள் அன்புக்கு நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டிற்குத் தனது குடும்பத்துடன் ஓய்வெடுக்கச் சென்றார். சமீபத்தில் ஓய்வு முடிந்து இந்தியா திரும்பினார். பின்பு மீண்டும் கங்குவா பட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இப்படத்தில் தனது போர்ஷன்களின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “கங்குவா படத்தின் என்னுடைய கடைசி ஷாட் முடிந்துவிட்டது. மொத்த படப்பிடிப்பு தளமும் பாசிட்டிவிட்டியால் நிரம்பியுள்ளது. இப்படம் பெரியது மற்றும் ஸ்பெஷலானது. நீங்க அதை திரையில் பார்ப்பதை காண ஆர்வமாக இருக்கிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குநர் சிவாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்