Skip to main content

"இன்னிசை இளவரசன் அன்புத்தம்பி யுவன்..." - சீமான் பாராட்டு  

Published on 07/05/2022 | Edited on 09/05/2022

 

seeman praised yuvan shankar raja

 

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக 'தீனா', 'துள்ளுவதோ இளமை', 'மௌனம் பேசியதே' உள்ளிட்ட படங்கள் தொடங்கி 'மாநாடு', 'வலிமை' படம் வரை தனது நீண்ட இசை பயணத்தில் நீங்கா முத்திரையை பதித்துள்ளார். காதல், சோகம், இன்பம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் தனது இசை மூலம் ஈடு செய்துள்ள யுவன் தனது சினிமா வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனையொட்டி யுவன் சங்கர் ராஜாவுக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் யுவன் சங்கர் ராஜாவை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "புகழொளி மிளிரும்  இசைப்பயணத்தில் 25வது ஆண்டினை நிறைவு செய்துள்ள இன்னிசை இளவரசன் என் அன்புத்தம்பி யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு பெருமித வாழ்த்துகள். இளம் வயதில் இசைத்துறையில் நுழைந்து தன் தனித்திறமையால் வெற்றித்தடம் பதித்து, நம் செவிகளில் உற்சாகத்துள்ளலாய், ஆற்றுப்படுத்தும் ஆறுதலாய், நிமிர வைக்கும் நம்பிக்கையாய், உருக வைக்கும் காதலாய், ஊற்றெடுக்கும் தாலாட்டாய் தவழ்ந்து நம் வாழ்வின் சகலவிதமான சூழல்களிலும் சரிபாதியாய் இடம் பிடிக்கும் உயிராழம் கொண்ட தேனிசை தம்பி யுவனுடையது. தன் தீந்தமிழ் பாடல்களால் திசையெங்கும் வீசுகிற காற்றை இனிக்க வைத்து, கேட்போர் மனங்களில் வற்றாத அருவியாய் கொட்டி தீர்க்கிற தம்பி யுவனின் இசை இன்னும் பல ஆண்டுகள் தமிழர் இதயங்களை நிரப்பி. புகழின் உச்சம் தொட வேண்டும் என்ற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். காலங்களை வென்று நிற்கும் இசைப்படைப்புகளால் சாதனைப் பக்கங்களில் நிறைந்து ஒளிரும் இன்னிசை இளவரசன் ஏன் அன்புத்தம்சி யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு எனது மனம் நெகிழ்ந்த அன்பினையும், பூரிப்பு வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்