Skip to main content

"இனி யாரும் என் அறக்கட்டளைக்கு பணம் தர வேண்டாம்"- ராகவா லாரன்ஸ் திடீர் முடிவு

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

Raghava Lawrence shared a update about Chandramukhi 2 and his trust

 

ராகவா லாரன்ஸ், தற்போது 'ருத்ரன்', 'அதிகாரம்' மற்றும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். இதில் 'சந்திரமுகி 2' படம் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனிடையே 'லாரன்ஸ் அறக்கட்டளை' என்ற நிறுவனத்தையும் நடத்தி, அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் மருத்துவமனை செலவுகள் உள்ளிட்ட பல நல உதவி திட்டங்களை செய்து வருகிறார். 

 

இந்நிலையில் ராகவா லாரன்ஸ், மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். இதனால் இனி என் அறக்கட்டளைக்கு யாரும் உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என  ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் சந்திரமுகி 2 படத்திற்காக என் உடலை மாற்றிக்கொள்ள நான் எடுக்கும் சிறிய முயற்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தை கொண்டுவந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்களின் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும். 

 

இரண்டாவது, இத்தனை ஆண்டுகள் என் அறக்கட்டளை மற்றும் ஆதரவளித்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்து உங்கள் நன்கொடைகளால் என் சேவைக்கு ஆதரவு கொடுத்துள்ளீர்கள். எனக்கு தேவைப்படும் போதெல்லாம் உங்களின் உதவியை பெற்று என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன். இப்போது நான் நல்ல இடத்தில் இருக்கிறேன். மேலும் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறேன். 

 

எனவே, மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். இதனால் இனி என் அறக்கட்டளைக்கு யாரும் உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம். உங்களின் ஆசீர்வாதம் மட்டும் போதும். இத்தனை வருடங்களாக எனக்கு கிடைத்த ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்