பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எம் முத்துராமன்(83) காலமானார். இவர் சிவாஜி நடிப்பில் வெளியான ராஜமரியாதை, ரஜினி நடிப்பில் வெளியான ஆயிரம் ஜென்மங்கள், பிரபு நடிப்பில் வெளியான மூடு மந்திரம், எடுப்பார் கைப்பிள்ளை, உங்க வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பில் வெளியான ஒரு வீடு ஒரு உலகம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு தமிழக அரசின் சிறந்த படத்திற்கான மாநில விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தயாரிப்பாளர் எம்.முத்துராமன்(83) இன்று காலை உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பது போல கதை அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ஆபத்தானவன், மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனிதநேயத்தை அதுக்கு மேல வை போன்ற வசனங்கள் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
தமிழ் திரைத்துறை தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களோடு எப்போதுமே இணக்கமான உறவைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளும். அந்த வகையில் முன்னாள் முதல்வர்களான கலைஞருக்கும், ஜெயலலிதாவிற்கும் பாராட்டு விழா நடத்திய வரலாறு தமிழ் திரைத்துறையினருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி கோரிக்கை வைப்பதும், பாராட்டு செய்வதும் இயல்பாக நடப்பதே. அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைத்துறை சார்பாகச் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாகத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சங்கம், பெப்சியில் உள்ள 24 சங்கங்களும் கலந்துகொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த விழாவிற்கான அழைப்பிதழை நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்கினார்கள். அழைப்பின்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என். ராமசாமி, செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்விற்கு வருவதாக ரஜினிகாந்த் உறுதி அளித்திருக்கிறார். இதேபோல், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.