Skip to main content

போக்சோ வழக்கு; விசாரணைக்கு ஆஜரான நடிகை

Published on 22/10/2024 | Edited on 22/10/2024
producer Ekta Kapoor and shobha kapoor under pocso act

பாலிவுட்டில் தயாரிப்பாளர்களாக வலம் வருபவர்கள் ஷோபா கபூர் மற்றும் அவரது மகள் ஏக்தா கபூர். தயாரிப்பு மட்டுமல்லாது ஏ.எல்.டி என்ற ஓ.டி.டி. தளத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த ஓ.டி.டி.யில் ஷோபா கபூர் மற்றும் ஏக்தா கபூர் தயாரித்த ‘காந்தி பாத்’ என்ற ஆபாச வெப் தொடர் 2018ஆம் ஆண்டில் இருந்து ஸ்ட்ரீமாகி வருகிறது. இந்தத் தொடரின் 7வது சீசன் கடந்த ஆண்டு வெளியானது. 

இந்த நிலையில் இந்த தொடரில் 18 வயதிற்கு கீழ் உள்ள நடிகையின் ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த 20ஆம் தேதி மும்பை எம்.ஹெச்.பி. காலனி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் தயாரிப்பாளர்கள் ஷோபா கபூர் மற்றும் ஏக்தா கபூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் சிகரெட் மற்றும் மது தொடர்பான காட்சிகள் வரும்போது எச்சரிக்கை வாசம் இடம்பெறாததால் அது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

இந்த வழக்கு தொடர்பாக முதல் கட்ட விசாரணைக்கு தயாரிப்பாளர்கள் ஷோபா கபூர் மற்றும் ஏக்தா கபூர் இன்று ஆஜராகினர். அவர்களிடம் மும்பை காவல் துறையினர் கேள்விகள் கேட்டு,  அடுத்த கட்ட விசாரணை வருகிற 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்று ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஷோபா கபூர் மற்றும் ஏக்தா கபூர் நிறுவனம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஷோபா கபூர் மற்றும் ஏக்தா கபூர் நிறுவனங்களின் தினசரி செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்றும் எல்லாத்துக்கும் தனித்தனியே குழுக்கள் இருக்கிறதென்றும் தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனம் சார்பில் விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்