தமிழ் சினிமா ரசிகர்களிடையே திரைப்பட பாடலுக்கு நிகராக இசை ஆல்பத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் புதிய கருத்துகளை மையமாக வைத்து தமிழில் அதிக இசை ஆல்பங்கள் வெளிவருகின்றன. அந்த வகையில், அடுத்ததாக இயற்கை மற்றும் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்து ‘பச்சை’ என்ற இசை ஆல்பத்தை ஏடிகே என்கிற ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் எழுதி, இயக்கியுள்ளார்.
இவர், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம்பெற்ற ‘தள்ளிப்போகாதே..’, ‘சோக்காளி..’ ஆகிய பாடல்களில் பணியாற்றியதோடு, யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்தப் பாடலை வைல்ட் லென்ஸ் ஸ்டூடியோவுடன் இணைந்து அபு கரீம் இஸ்மாயில் தயாரிக்க, பிரியா மாலி இசையமைத்துப் பாடியுள்ளார். இப்பாடலில் டேனியா பல்சான் நாயகியாக நடித்துள்ளார். ஒரு பெண் வனப்பகுதிக்குள் ஓடி, புதிய காற்றை சுவாசித்து, அங்கு கிடைக்கும் சுதந்திரத்தை அனுபவிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ள இப்பாடல், ஸ்பாட்டிஃபை, ஐடியூன்ஸ், சாவன் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.