தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக அதிகரித்து பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருக்கிறது. இதனிடையே நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் விரைந்து நலம் பெற வேண்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பார்த்திபன் வெளியிட்ட பதிவில், "பாலிடிக்ஸில் மட்டுமல்ல பழகும் மாண்பிலும் பாஸிட்டிவான தமிழக முதல்வர் முதல், கரோனாவால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் அனைவரும் விரைந்து நலம் பெற வேண்டும். முகக்கவசம் அணிவோம் . பாதுகாப்பை உறுதி செய்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.