Skip to main content

மணிரத்னத்துக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

oscar committee invites maniratnam

 

உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டும் கோலாலமாகக் கொண்டாடப்பட்டது. இதுவரை ஆஸ்கர் விருது வெறும் கனவாக இருந்த இந்தியர்களுக்கு இந்தாண்டு 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் மூலம் சாத்தியமானது. சிறந்த பாடல் பிரிவில் தெலுங்கு பாடலான 'நாட்டு நாட்டு' பாடலும் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் தமிழ் ஆவணக் குறும்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படமும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. 

 

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டிற்கான புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 398 கலைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சூர்யா, கஜோல், இந்தி இயக்குநர் ரீமா காக்டி உள்ளிட்ட சிலருக்கு அழைப்பு விடப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு அவர்களும் இணைந்தனர். 

 

அந்த வகையில் இந்தாண்டு 'ஆர்.ஆர்.ஆர்' பட பிரபலம் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிகர் பிரிவிலும் எம்.எம். கீரவாணி இசையமைப்பாளர் பிரிவிலும் செந்தில்குமார் ஒளிப்பதிவாளர் பிரிவிலும் மணிரத்னம் இயக்குநர் பிரிவிலும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாடலாசிரியர் சந்திர போஸ், ப்ரொடக்‌ஷன் டிசைனர் சாபு சிரில், தயாரிப்பாளர்கள் சித்தார்த் ராய் கபூர், கரண் ஜோகர், இயக்குநர் சைதன்யா தம்ஹானே, இயக்குநர் மற்றும் எடிட்டர் ஷானக் சென், விஎப்எக்ஸ் பணியாளர்கள் ஹரேஷ் ஹிங்கோராணி மற்றும் பி.சி. சனத், கிராந்தி சர்மா ஆகியோர் அவரவர் பணியாற்றும் துறை சார்ந்த பிரிவில் இடம் பெற்றுள்ளனர். 

 

இயக்குநர் மணிரத்னம் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான், "ஆஸ்கர் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இயக்குநர் மணிரத்னத்திற்கு வாழ்த்துகள். பொன்னியின் செல்வன், ரோஜா, பாம்பே, தில் சே மேலும் பல... ஆஸ்கர் குழுவுக்கு உங்களை வரவேற்கிறேன்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கிய, நாயகன், அஞ்சலி உள்ளிட்ட படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   

Next Story

ஆஸ்கர் 2025 விருது விழா விவரம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
oscar 2025 update

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 96ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 

இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு இந்தியாவிலிருந்து மலையாளப் படமான '2018' படம் அனுப்பப்பட்டது. ஆனால், இப்படம் இறுதிப் பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியது. இதையடுத்து இந்தியாவில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு தேர்வானது. இப்படம் ஜார்க்கண்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தனது மகளுக்கு நீதிப் போராட்டத்தை நடத்திய தந்தை குறித்து எடுக்கப்பட்டதாகும். ஆனால் இப்படமும் விருது பெறவில்லை.

இவ்விருது விழாவில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் வென்று பலரது பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் 97ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி (இந்தியாவில் மார்ச் 3 ) நடக்கும் என அறிவித்துள்ளது. விருதுக்கு நாமினேஷனான பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.