நவம்பர் 1 ஆம் தேதி மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் 'கேரள பிறவி' என்ற தலைப்பில் இன்று தொடங்கி 7 ஆம் தேதி வரை மொத்தம் 7 நாட்கள் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. இந்த விழா கேரளாவின் முன்னேற்றம், சாதனைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கருத்தரங்குகள், கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வின் தொடக்க விழா இன்று கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளா முதல்வர் பினராயி விஜயனோடு ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, நார்வே, கியூபா ஆகிய நாடுகளின் தூதர்கள் உட்படப் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
இவர்களோடு நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். மேலும் திரையுலகப் பிரபலங்கள் மோகன்லால், மம்மூட்டி, சோபனா, மஞ்சு வாரியர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மேடையில் இவர்கள் உள்படப் பலரும் விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கினர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.