Skip to main content

"இதை அப்போவே சொல்லிருக்கலாமே; நேரம் தான் வீண்" - அபிராமி புகார் குறித்து சனம் ஷெட்டி

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

kalakshetra issue sanam shetty reacts for abhirami statement

 

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், அக்கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி, "அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். 89 வருஷமா இந்த கல்லூரியில் இதுபோன்று ஒரு பிழை சொல்வதற்கு எதுவுமே நடக்கவில்லை. இது குறித்து பேச விருப்பமில்லை. கலாஷேத்ரா கல்லூரி குறித்து அவதூறு பரப்பக்கூடிய வேலை தான் தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் மட்டும் பார்க்கக் கூடாது. ஆசிரியருக்கும் குடும்பம் இருக்கு" என கல்லூரிக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். 

 

அபிராமியின் இந்த கருத்து குறித்து நடிகை சனம் ஷெட்டி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஆணவம் மற்றும் அறியாமை. பேச விருப்பம் இல்லேனா பேசாம இருங்க. உங்களுக்கு நடக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கு நடக்கவில்லை என்று அர்த்தமல்ல. 89 வருடங்களாக எங்கே இருந்தீர்கள். அங்குள்ள ஒவ்வொரு ஆசிரியரின் ஒவ்வொரு செயலுக்கும் உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? நீங்கள் ஏன் ஒரு பக்கம் இருக்கிறீர்கள்? உண்மைக்காக காத்திருங்கள்" எனப் பதிவிட்டிருந்தார். 

 

இதனிடையே ஹரிபத்மன் மீது பொய்யாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அபிராமி ஒரு புகாரையும் அளித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஹரிபத்மன் சார் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த வரைக்கும் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. இந்த பிரச்சனையில் நிர்மலா, நந்தினி ஆகிய 2 ஆசிரியர்கள் மாணவிகளைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துகின்றனர்” எனப் பேசியிருந்தார்.

 

இந்நிலையில், அபிராமியின் இந்த பேச்சிற்கு சனம் ஷெட்டி, "அதே கலாஷேத்ராவில் ஆசிரியர்களால் கொடுமைப்படுத்துதல், கையாளுதல் போன்றவற்றுக்கு ஆளானதை அபிராமி ஏற்றுக்கொண்டுள்ளார். இதை அப்போவே சொல்லிருக்கலாமே. நேரம் தான் வீணானது. இவங்களே இப்போ புது புகார் குடுக்கிறாங்க" எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்