
நரகாசூரன் பட பிரச்சனை காரணமாக கவுதம் மேனனும், இயக்குனர் கார்த்திக் நரேனும் சில நாட்களாக ட்விட்டரில் மோதிக் கொண்டது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்பிரச்சனைக்கு முடிவுகட்டும் விதமாக இயக்குனர் கவுதம் மேனன் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தான் இயக்கும் துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களின் தற்போதைய நிலையை பற்றி பேசும்போது...."துருவ நட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா என இரு படங்களும் நடிகர்களின் தேதி ஒதுக்கீட்டை வைத்தே உருவாகி வருகிறது. இதுவரை 70 நாட்கள் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பும், 45 நாட்கள் எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. இரு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும், இந்த இரு பெரிய படங்களுமே இந்த ஆண்டுக்குள் ரிலீசாகும். இதில் துருவ நட்சத்திரம் படத்திற்கு சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்கின்றன, எனவே படத்தை குறுகிய இடைவெளியில் முடிக்க முடியவில்லை. இந்த இரு படங்களுமே இருவேறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த இருபடங்களிலுமே எந்த பிரச்சனையும் இல்லை. சரியான அளவிலேயே படத்திற்கு தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திலும் நான் சம்பந்தமாகவில்லை. ஆனால் படம் குறித்த செல்வராகவனின் யோசனை மற்றும் கதை குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். பின்னர் அந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்தார். இந்த படத்திற்கு நான் தயாரிப்பாளர் அல்ல. ஆனால் பங்குதாரர். போஸ்டரில் எனது பெயர் வரவேண்டும் என்று மதன் விரும்பினார். ஒரு படைப்பாளியாக செல்வா சிறந்தவர். திறமையானவர். இந்த படமும் சிறப்பாக வந்திருக்கிறது. வெகு விரைவில் நெஞ்சம் மறப்பதில்லை படமும் ரிலீசாகும்" என்று பதிவிட்டுருந்தார்.