Skip to main content

"ஜாமீன்தாரர் சொத்துக்களுக்கு உரிமம் கோரமுடியுமா..." - டி.ராஜேந்தருக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் !

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

director bharathiraja condemns Trajendar maanaadu movie issue

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.  

 

இதனிடையே, ‘மாநாடு’ படத்தின் சாட்டிலைட் உரிமம் தொடர்பாக நடிகர் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குநரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா டி.ராஜேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், வணக்கம், தங்கள் மகன் திரு சிலம்பரசன் நடித்து எங்கள் உறுப்பினர் திரு சுரேஷ் காமாட்சி தயாரித்த வெளியான மாநாடு திரைப்படம் சம்பந்தமாக தயாரிப்பு நிலையிலும், வெளியீட்டு நிலையிலும் TFAPA பலமுறை தலையிட்டு படம் சுமூகமாக வெளியாக உதவியதை தாங்கள் அறிந்ததே படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றி பெற்று இன்று திரு சிலம்பரசன் அவர்களின் வியாபாரமும் அவர் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

 

இந்த வெற்றிக்குப் பின்னால் இதன் தயாரிப்பாளரும், நிதியாளரும் எவ்வளவு இடர்களைத் தாங்கி நின்றார்கள் என்பதை நீங்கள் உட்பட மொத்த திரையுலகமும் அறியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர், நிதியாளர் இருவர் மீதும் தாங்கள் வழக்குத் தொடுத்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம் மாநாடு வெளியீட்டுக்கு முந்தைய நாள் மொத்த திரையுலகமும் படம் வெளியாக பிரதிபலன் பாராமல் உதவ முன்வந்தது இன்றும் நாம் ஒரு குடும்பமாக இருப்பதற்கு சான்று.

 

படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்கப்படாததால் அதன் மீதான கடன் தொகைக்கு யாராவது உத்தரவாதம் கொடுத்தால் பணம் தனது கைக்கு வர தாமதமானாலும் பரவாயில்லை படத்தை வெளியாக அனுமதிப்பதாக நிதியாளர் பெரியமனதுடன் ஒத்துக்கொண்டதால் தாங்கள் தங்களது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உத்தரவாதம் தர முன்வந்தீர்கள் படம் நன்முறையில் வெளியாகி பெரு வெற்றியடைந்து, தொலைக்காட்சி உரிமமும் நல்ல விலைக்கு விற்று, இன்று தயாரிப்பாளரே கடனை திரும்பி தருகிறார்.

 

ஆனால் திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிக தவறான முன்உதாரணம் ஆகும். ஜாமீன்தாரர் சொத்துக்களுக்கு உரிமம் கோரமுடியுமா? திரைத்துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா? ஒரு அமைப்பில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் தாங்கள் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் தெரியாமலே தெலுங்கில் பிரஸ் மீட் வைத்து கீதா ஆர்ட்ஸ் மூலமாக படத்தை வெளியிட முயற்சித்தது எந்தவிதத்தில் நியாயம்?

 

நீங்கள் அதன் சாதக பாதகங்களை அறியாதவரா? இதையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் திரு சுரேஷ் காமாட்சியும் நஷ்ட ஈடு கேட்டு உங்கள் மீது வழக்கு தொடுத்தால் உங்கள் நிலை என்னவாகும்?. வியாபாரக் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், வழக்கு போட்டும் ஒரு தயாரிப்பாளரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருப்பதை தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்