Skip to main content

“ஆதரவை வெறுப்பு பிரச்சாரமாக மாற்ற வேண்டாம்” - ஆசிஃப் அலி

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Asif Ali REACTS To Ramesh Narayan Snubbing Him at Manorathangal Trailer Launch

மலையாளத்தில் ‘மனோதரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு ஆந்தாலஜி சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் மலையாள இலக்கியத்தில் புகழ்பெற்ற எம் டி வாசுதேவனின் 9 கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் கமல்ஹாசன், மோகன்லால், மம்மூட்டி, ஃபஹத் பாசில், பார்வதி திருவோத்து, பிஜு மேனன், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி என ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். பிரியதர்ஷன், ரஞ்சித், ஷயாம்பிரசாத், அஸ்வதி வி நாயர், மகேஷ் நாராயணன், ஜெயராஜன், சந்தோஷ் சிவன், ரத்தீஷ் அம்பாட் உள்ளிட்டோர் இயக்கியுள்ளனர். 

இந்த சீரிஸ் ஆகஸ்ட் 15ஆம் தேதி மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  இதில் இயக்குநர் ஜெயராஜ் இயக்கிய ஒரு படத்துக்கு மலையாள மூத்த இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் இசையமைத்துள்ளார். இந்த சீரிஸின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் ரமேஷ் நாராயணுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மலையாள நடிகர் ஆசிஃப் அலி மேடையிலிருந்து இறங்கி வந்து இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் அமர்ந்திருந்த இடத்துக்கே வந்து கொடுத்தார். அப்போது அந்த விருதை அவர் கையால் வாங்க மறுத்த ரமேஷ் நாராயண், அதற்குப் பதிலாக இயக்குநர் ஜெயராஜைக் கொடுக்கச் சொல்லியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் ரமேஷ் நாராயண் ஆசிஃப் அலியை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது. அதோடு ஆசிஃப் அலிக்கு ஆதரவாகவும் அவர் எந்த எதிர்வினை ஆற்றாமல் இருந்ததற்காக பாராட்டுகளும் குவிந்தன. நடிகை அமலா பால், ஒரு நிகழ்வில் கூட, “நாம் வாழ்க்கையில் எதிர்பாராத பல சூழ்நிலைகளை சந்திப்போம். ஆனால் நாம் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது முக்கியம். ஆசிப் அலியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது” எனக் கூறினார். 

இதனிடையே இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண், இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும் ஆசிஃப் அலி எனக்கு விருது கொடுக்க வருகிறார் என்பது எனக்குத் தெரியாது என்றும் மேடையில் ஏற்றப்பட்டு விருது கொடுக்கப்பட்டிருந்தால், என்னை நோக்கி யாரோ விருது கொடுக்க வருகிறார்கள் என்பதை அறிந்திருப்பேன் என்றும் யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை என்று விளக்கமளித்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து, ஆசிஃப் அலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “மத அடிப்படையில் இந்த சம்பவத்தை பார்க்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. அந்த நிகழ்வு ஒரு தவறான புரிதலால் எற்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவறிழைத்ததால், இசையமைப்பாளர் குழம்பிவிட்டார். நீங்கள் வீடியோவை பார்த்தால் தெரியும், அவருக்கு விருது வழங்கிவிட்டு நான் நகர்ந்துவிட்டேன். 

இந்த சம்பவம் குறித்து அவரிடம் பேசினேன். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் என்னை அணுக முயன்று கொண்டிருக்கிறார். ஆனால் ஊடகத்தினர் என்னை தொடர்ந்து தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பாக கேட்டதால், எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல், என்னுடைய ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டேன். பின்பு அவருடன் பேசிய போது, அவரது குரல் என் இதயத்தை உடையச் செய்தது. கண்ணீருடன் என்னிடம் மன்னிப்பு கேட்டார். தயவு செய்து எனக்கு கிடைத்த ஆதரவை அவருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரமாக மாற்ற வேண்டாம், ஏனென்றால் அவரது வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்றார். 

சார்ந்த செய்திகள்