தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் 'லால் சலாம்', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இதுபோக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
திரைப்படங்களுக்கிடையே இசை நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பேட்டிகளிலும் கவனம் செலுத்தி வரும் ஏ.ஆர். ரஹ்மான், வரும் 12 ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகளைக் கடந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரை அனுபவம் குறித்துப் பேசியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, "பாலிவுட் என்றால் இந்தி சினிமா மட்டும்தான் என உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு பாடலான 'நாட்டு நாட்டு...' பாடல் ஆஸ்கர் வாங்கியிருப்பது மகிழ்ச்சி. பாலிவுட் என்ற வார்த்தையை நான் பயன்படுத்துவதில்லை. அது ஹாலிவுட் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. பாலிவுட் என்று யாராவது பயன்படுத்தினால் அதை நான் திருத்துவேன்.
அற்புதமான திறமையாளர்கள் இருப்பதை இந்த உலகம் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். அவர்களுக்கு தேவையான பண உதவியும் பரந்துபட்ட பாதையையும் உருவாக்கினால் நல்ல படைப்புகளை கொண்டு வர முடியும். இந்தியா மாறுபட்டது. இது ஒரு கலாச்சாரம் அல்ல, வானவில் போன்ற பல கலாச்சாரங்கள் உடையது" என்றார்.