கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து பிஎம்டபிள்யூ எக்ஸ்5 என்ற சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதம் செய்ததற்காக நடிகர் விஜய்க்கு ரூ.30.23 லட்சம் அபராதமாக செலுத்த வணிக துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விஜய், ஏற்கனவே நுழைவு வரி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததால்தான் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் , நுழைவு வரி செலுத்திய நிலையில் அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்த உள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் விஜய் தொடுத்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறி தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அனைத்து விவாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கைகளுடன் அடையார் கேட் ஹோட்டல் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வழக்குகளின் தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.