Skip to main content

"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா..." -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு! |வென்றோர் சொல் #24

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

Sridhar Vembu

 

 

சில நேரங்களில் விரக்தி மற்றும் ஏமாற்றத்தின் வெளிப்பாடாய் லட்சியக்கனவின் மீது கொண்டுள்ள பிடி விலகும். அந்நேரங்களில் சாவின் விளிம்பிற்கு சென்ற கனவினை மீட்டு, மீண்டும் உயிர்ப்பிக்க அவ்வப்போது ஏதாவது சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி வாசிப்பது உண்டு. அந்தவகையில், அன்று ஒரு மனிதனின் சாதனை வரலாற்றை வாசிக்க நேர்ந்தது. 'உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?' என்பது அந்த மனிதரிடம் முன் வைக்கப்பட்ட கேள்வி. 'கூகுளின் எதிர்காலத்திட்டம் என்ன? தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்வதுதானே... அதுதான் எனக்கும், என் நிறுவனத்திற்கும்' - இது அம்மனிதர் கூறிய பதில். பின் அந்த மனிதர் குறித்து இணையத்தில் தேடுகையில், பார்ப்பதற்கு எளிமையாக வேஷ்டி சட்டையுடன் தமிழ் மண்ணிற்கு சொந்தக்காரராக இருந்தார். இத்தனை எளிமையான மனிதரிடமிருந்தா இவ்வளவு வலிமையான பதிலும், கனவுகளும் வெளிப்பட்டன என்ற பிரமிப்பு அடங்குவதற்குள் அவரைப் பற்றியும், அந்நிறுவனத்தைப் பற்றியும் முழுவதும் அறிந்து கொள்ள முடிந்தது. ஆம், அவர் சோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு.

 

தஞ்சை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட  ஸ்ரீதர் வேம்பு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ்வழியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த இவர், கல்லூரிப் படிப்பை ஐஐடி மெட்ராஸில் படிக்கிறார். பின் அமெரிக்கா சென்று முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணிக்கு சேர்கிறார். இளம் வயதிலேயே அரசியல் மீது சிறு ஆர்வம் கொண்டிருந்த ஸ்ரீதர் வேம்புவிற்கு அமெரிக்காவில் இருக்கும்போது, ஜப்பான், சிங்கப்பூர், தைவான் ஆகிய நாட்டு சந்தைகள் பற்றியும், அரசியல் சூழல் பற்றியும் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வலுவாகக் காலூன்ற, இந்தியா திரும்புகிறார். 1996-ல் 'அட்வென்ட் நெட்' எனும் பெயரில் தொடங்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் 12 கிளைகளுடன், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலையாட்களுடன் வருடம் ஒன்றிற்கு 3 ஆயிரம் கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டும் நிறுவனமாக சோஹோ கொடிகட்டிப் பறக்கிறது.

 

"சிங்கப்பூர், ஜப்பான் பற்றி படிக்கும்போது நாம் ஏன் அவர்கள் அளவிற்கு இன்னும் வளரவில்லை என்ற கேள்வியெழுந்தது. நிறைய பயணம் செய்ய ஆரம்பித்த பின் அந்தக்கேள்வி இன்னும் அதிகமானது. இந்தியாவில் நிறைய திறமைகள் உள்ளது. அதை சரியாக பயன்படுத்தினால் நாமும் இவ்வாறு செய்யமுடியும் என்று எனக்குத் தோன்றியது. அப்படித்தான் என் பயணம் தொடங்கியது"

 

இன்று உலகம் முழுவதுமுள்ள பல நிறுவனங்களின் இதயமாக சோஹோ நிறுவனத்தின் 40-க்கும் மேற்பட்ட மென்பொருட்கள் செயல்பட்டு வருகின்றன. தகவல் பரிமாற்றத்தில் தொடங்கி வருகைப்பதிவேடு உட்பட கணினிமயமாக்கப்பட்ட  அனைத்திலும் இன்று சோஹோ நிறுவனத்தின் பங்களிப்பு நிறைந்துள்ளது. உலகம் முழுவதும் இன்று சோஹோ சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 மில்லியனுக்கும் மேலாகும்.

 

சோஹோ போன்று இன்று உலக அளவில் பல நிறுவனங்கள் இருந்தாலும், இவையனைத்தில் இருந்தும் சோஹோ தனித்தே நிற்கிறது. பிற நிறுவனங்கள் பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கும்போது சோஹோ நிறுவனம் திறமையாளர்களுக்கு வேலை கொடுக்கிறது. கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அந்நிறுவனத்தின் துணை அமைப்பாக உள்ள சோஹோ பல்கலைக்கழத்தில் இலவசமாகப் பயிற்றுவித்து அவர்களை வேலைக்கும் அமர்த்திக் கொள்கிறது.

 

"எங்களுக்கு டிகிரி முக்கியம் இல்லை. ஆர்வம் அதிகம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்துதான் பயிற்சியளித்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் அப்துல் அலீம் என்று ஒரு காவலாளி வேலை பார்த்தார். அவருக்கு கணினி பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் இருப்பதை பார்த்தோம். பின் சோஹோ பல்கலைக்கழத்தில் சேர்ந்து, 18 மாதம் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார். அவர் தற்போது எங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்".

 

இனி வரும் காலங்களில் கல்லூரி டிகிரி என்ற ஒன்று தேவையா என பெரிய விவாதமே இன்று நடந்து வரும் வேளையில், 2004-ம் ஆண்டு முதலே இத்தகைய முறை சோஹோ நிறுவனத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது எவ்வளவு தொலைநோக்குடன் ஸ்ரீதர் வேம்பு செயல்பட்டு வருகிறார் என்பதைக் காட்டுகிறது. மேலும், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் என்றாலே சென்னை, பெங்களூரு மாதிரியான மாநகரங்களில் மட்டும்தான் நடத்த முடியும் என்ற நடைமுறையிலும் ஸ்ரீதர் வேம்பு மாற்றங்கள் செய்துள்ளார். தற்போது தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையிலும், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிலும் இவரது நிறுவனம் பல ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. இப்படி ஐடி துறையில் இவரது இயக்கத்தை பார்க்கும்போது 'சூரரைப் போற்று' படம்தான் நினைவுக்கு வருகிறது. வழக்கங்களை உடைத்து வென்றிருக்கிறார்.   

 

கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்கள், சோஹோ நிறுவனத்தை தங்களது போட்டியாளராகவே கருதுகின்றன. இவ்வளவு உயரங்களைத் தொட்டாலும், தொடர்ந்து ஓட வேண்டும் என்ற வேட்கை மட்டும் அவருக்குள் தணியவில்லை என்பதைத்தான் அவரது சமீபத்திய பேட்டி வெளிப்படுத்துகிறது.

 

"இன்று உலகில் எங்கு பார்த்தாலும் சாம்சங், ஹோண்டா நிறுவனத்தயாரிப்பை பார்க்க முடிகிறது. சோஹோ நிறுவனம் இன்றைய நிலையில் இருந்து கூடுதலாக ஒரு 10 சதவிகிதம் வளர்ச்சியடைந்தால் எங்கு பார்த்தாலும் சோஹோ நிறுவன ஃபிராண்டை பார்க்க முடியும். விரைவில் அதை எட்டுவோம்" என்கிறார் நம்பிக்கையுடன்.

 

எந்தப்பின்புலமும் இல்லாத ஒருவராயினும், தன்னுடைய உழைப்பையும் நம்பிக்கையும் முதலீடு செய்து உழைத்தால் எத்தகைய உயரத்தையும் தொடலாம் என்பதே ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம். கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.