மும்பை சென்னை இடையேயான இரண்டாவது போட்டி இன்று சென்னை சேப்பாக் மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு தொடங்குகிறது. சர்வதேச போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் போல ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. சி.எஸ்.கே 11 போட்டிகள் விளையாடி 8 போட்டிகளில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதற்கு முன்பாக சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் வான்கடே மைதானத்தில் 171 ரன்களை சேஸ் செய்த சென்னை அணி வெறும் 133 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சி.எஸ்.கே. அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு தேவையான புள்ளிகளை பெற்றுவிட்டதால் முதுகுவலியால் சிரமத்தை சந்தித்து வரும் தோனிக்கு ஓய்வு வழங்கப்படுமா என சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹஸ்ஸியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து ஹஸ்ஸி, “தோனி எந்த ஒரு ஆட்டத்தையும் தவறவிட விரும்பவில்லை. சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை அவர் விரும்புகிறார். சென்னை நகரம், தோனியின் இதயத்துக்கு நெருக்கமான நகரமாக உள்ளது. அவர் விளையாடுவதையும் சிறப்பாக செயல்படுவதையும் விரும்புகிறார். மேலும் அணி வெற்றி பெறுவதை பார்க்கவும் அவர் விருப்பம் கொள்கிறார். இதனால் அவருக்கு ஓய்வு கொடுக்க முயற்சி செய்வது என்பது கடினமான விஷயம். காயம் தொடர்பான விஷயத்திலும், ஓய்வு எடுப்பதிலும் தோனி என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை. நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக கடந்த 17-ம் தேதி ரெய்னா தலைமையில் களமிறங்கிய சிஎஸ்கே சன்ரைஸஸ் ஹைதெராபாத் அணியை எதிர்கொண்டது. அதில் சிஎஸ்கே 20 ஓவர்களில் 132 இரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்தது. அதன்பின் விளையாடிய சன்ரைஸஸ் ஹைதெராபாத் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 இரன்களை எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.